`கோவை மாநகருக்கு 'மாஸ்டர் பிளான்' திட்டம் உருவாக்கப்படும்'- முதல்வர் மு.க.ஸ்டாலின்

`கோவை மாநகருக்கு 'மாஸ்டர் பிளான்' திட்டம் உருவாக்கப்படும்'- முதல்வர் மு.க.ஸ்டாலின்

“கோவை மாநகருக்கு 'மாஸ்டர் பிளான்' திட்டம் உருவாக்கப்படும் என்றும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 'அறிவுசார் பூங்கா' அமைக்கப்படும்” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழில்முனைவோர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, பேசிய முதல்வர், "திமுக ஆட்சிக்கு வந்தப்பிறகு 5 முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியுள்ளோம். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 69 ஆயிரம் கோடிக்கு 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தெற்காசியாவிலேயே முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என செயலாற்றுகிறோம். தமிழகத்தில் செமிகண்டக்டர் உற்பத்திக்கான முயற்சிகளில் ஈடுபட தொழில்முனைவோரை கேட்டுக் கொள்கிறேன். நமது மாநிலம் தொழில்வளர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழவேண்டும்.

கோவை மாநகரை மேம்படுத்த மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும். சென்னைக்கு அடுத்ததாக தகவல் தொழில்நுட்பத்துறையிலும் கோவை வேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு தொழில்களின் மையமாக கோவை விளங்குகிறது. கோவை பாரதியார் பல்கலையில் அறிவுசார் பூங்கா அமைக்கப்படும். கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் தொழில்துறையை காக்க தனி கவனம் செலுத்தப்படுகிறது. தமிழக அரசு லட்சியத்தை அடைய கோவையின் பங்களிப்பு மிகவும் முக்கியம். கயிறு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

பருத்தி மற்றும் நூல் நிலை உயர்வை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். 5 மாவட்டங்களில் புதிய தொழிற்பட்டறைகள் உருவாக்கப்படும். ரூ.218 கோடி மதிப்பில் 4 தொழிற்பட்டறைகள் உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. சிலுவம்பாளையத்தில் தனியார் பங்களிப்புடன் தொழிற்பட்டறை உருவாக்கப்படுகிறது. அரசின் வாய்ப்புகளை தொழில்துறையினர் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தாெழில் வளர்ச்சியில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ வேண்டும். அதுமட்டுமல்லாது ஆசியாவிலேயே தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in