`மன்னார்குடி ஜீயர் தெரியாமல் சொல்லிவிட்டார்'- பின்வாங்கிய மதுரை ஆதீனம்

`மன்னார்குடி ஜீயர் தெரியாமல் சொல்லிவிட்டார்'- பின்வாங்கிய மதுரை ஆதீனம்

தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ள மதுரை ஆதீனம், அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் தெரியாமல் சொல்லி விட்டார், இனிமேல் சொல்ல மாட்டார் என்றார்.

தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் பல்லக்கில் ஆதீனத்தை அமர வைத்துத் தூக்கிச் செல்லும் நிகழ்வுக்குத் தமிழக அரசு தடை விதித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தடைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல் தமிழகம் முழுவதும் எழுந்தன. பல்வேறு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தானே நேரில் வந்து நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயார் என்று சவால் விடுத்தார். மதுரை ஆதீனம், என் உயிரே போனாலும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்தியே தீருவேன், தருமை ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமரவைத்து நானே தோளில் தூக்கிச் செல்வேன் என்றார்.

இந்த நிலையில், தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நேற்று தமிழக அரசு நீக்கியது. பட்டினப் பிரவேசத்துக்கு தடை விதித்திருந்த கோட்டாட்டசியரே இந்த விவகாரத்தில் மீண்டும் ஒரு உத்தரவைப் பிறப்பித்து பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மதுரை ஆதீனம் செய்தியாளர்களைச் சந்தித்தார். முன்னதாக மடத்திற்கு வந்த அனைவருக்கும் ஆதீனம் இனிப்புகளை வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துரை ஆதீனம், "பட்டினப் பிரவேசம் நிகழ்வு 500 ஆண்டுகளுக்கு மேல் குறிப்பாக ஏழாம் நூற்றாண்டில் நடந்துள்ளது. எனவேதான் இதனை நடத்தியே தீரவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு நான் கோரிக்கை வைத்தேன். இதனைத் தொடர்ந்து நேற்று அரசு இந்நிகழ்விற்கு அனுமதி அளித்துள்ளது. இதை நடத்த வேண்டும் என்று ஆதரவுக் குரல் எழுப்பிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் தமிழக மக்கள் ஆகியோருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

மேலும், "முதல்வருக்கு நான் மற்றொரு கோரிக்கையை விடுத்துக்கொள்கிறேன். அனைத்து சமயத்தை சேர்ந்த சம்பிரதாயங்களையும் அவர் பாதுகாக்க வேண்டும். முதல்வர் அனைவருக்குமானவர்" என்றார்.

தொடர்ந்து, "பட்டினப் பிரவேசம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த நிலையில், அதை சர்ச்சையாக்கி இப்போது உலகறியச் செய்த திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு நன்றியும் வாழ்த்துகளும். அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் தெரியாமல் சொல்லி விட்டார், இனிமேல் சொல்ல மாட்டார். ஆதீன மடத்தில் பாஜக, இந்து அமைப்புகள் தலையீடு இருப்பதை பற்றி யார் என்ன குற்றச்சாட்டு வைத்தாலும் அதை கண்டுகொள்ளப் போவதில்லை. முந்தைய ஆதீனம் அதிமுக, திமுக ஆட்சிகளின் போது அவைகளுக்கு ஆதரவு தெரிவித்தார். நான் அப்படி எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது.

ஆளும் கட்சி அரசியல்வாதிகள் மிரட்டல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். ஆதீன மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகளே முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளார். அது குறித்து அரசுக்கு புகார் அனுப்பப்பட்டு உள்ளது. ஏழை, எளியோர் உள்ளிட்ட அனைத்து மக்களும் முழுமையாக சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் வாங்கும் நடைமுறையை அரசு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

சன்யாசி தர்மங்களை ஆதீனங்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என எம்.பி. சு.வெங்கடேசன் வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, "சந்நியாச தர்மங்களை நான் முழுமையாக பின்பற்றுகிறேன்" என்று பதிலளித்தார். மேலும், பிரதமர் மோடியை சந்தித்து பாதுகாப்பு கேட்கும் முடிவு குறித்த கேள்விக்கு, "மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in