`அமைச்சரே உங்கள் பதில் குரூரமானது; மறுபரிசீலனை செய்யுங்கள்'

மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தல்
`அமைச்சரே உங்கள் பதில் குரூரமானது; மறுபரிசீலனை செய்யுங்கள்'

"அமைச்சரே உங்கள் பதில் குரூரமானது. மறுபரிசீலனை செய்யுங்கள். மீண்டும் கட்டண சலுகையை கொண்டு வாருங்கள்" என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை மீள்வது குறித்து நான் 20.10.2021 எழுதிய கடிதத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் 21.3.2022 அன்று பதில் அளித்துள்ளார். 2020-21-ல் ரயில்வே பயணக் கட்டணம், 2019-20ஐ ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்குதான் இருந்தது என்று கூறி, எல்லா பிரிவினருக்கும் சலுகை கட்டணம் வழங்குவது சாத்தியமல்ல என்று தெரிவித்துள்ளார்.

கோவிட் காலத்தில் நிறைய நாட்கள் ரயில்கள் ஓடவில்லை. ஆகவே வருவாய் குறைந்தது எல்லோரும் அறிந்ததே. அதுபோல பல குடும்பங்களும் வருவாயை, வேலைகளை இழந்தன. கோவிட் கால நிவாரணமாக மாதம் ரூ.7,500 தாருங்கள் என்ற கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை. மூத்த குடிமக்களின் உளவியல் பாடுகள் சொல்லிமாளாது. தாங்கள் சுமையை கருதப்படக்கூடாது என்ற அவர்களின் உணர்வுகள் மிக முக்கியமானது.

அரசாங்கத்திற்கு இதயம் வேண்டும். இதுபோன்ற கட்டண சலுகைகளை அவர்களுக்கு சமூகம் ஆற்றுகிற நன்றிக் கடன் மட்டுமல்ல அவர்களின் உரிமையும் கூட. இன்னும் அவர்கள் தாங்கள் நுகரக் கூடிய ஒவ்வொரு பண்டம், சேவை மீதும் வரி செலுத்துகிறார்கள். வருமான வரி செலுத்துபவர்களும் உண்டு. கடந்த 6 மாதங்களாக முன்பைப்போல ரயில்கள் ஓட ஆரம்பித்தும் விட்டன. அவர்கள் கை விரலைப் பிடித்து இந்த தேசம் நடந்திருக்கிறது. அமைச்சரே உங்கள் பதில் குரூரமானது. மறுபரிசீலனை செய்யுங்கள். மீண்டும் கட்டண சலுகையை கொண்டு வாருங்கள்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in