சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி இன்றுடன் அப்பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்குப் பணி மாற்றம் செய்யப்பட்ட நிலையில், நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார். 62 வயதான நிலையில் அவர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். ஓய்வுக்குப் பிறகு அன்னிய செலாவணி மோசடி தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாய தலைவராகப் பதவி ஏற்கவுள்ளார்.
முனீஸ்வர் நாத் பண்டாரி, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு, அதிமுக பொதுக்குழு வழக்கு என பல்வேறு முக்கிய வழக்குகளை இவர் கையாண்டுள்ளார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நாளை முதல் செயல்பட உள்ளார்.