குடியரசு தின விழாவுக்கு குழந்தைகள், பார்வையாளர்கள் வர வேண்டாம்!

தமிழக அரசு வேண்டுகோள்
குடியரசு தின விழா
குடியரசு தின விழா

குடியரசு தின விழாவை பள்ளி மாணவர்கள், குழந்தைகள் மூத்த குடிமக்கள் மற்றும் பார்வையாளர்கள் காண நேரில் வர வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய குடியரசுத் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 26ஆம் தேதி (இன்று) காலை 8 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிக்க உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளி குழந்தைகளும் பங்கேற்பர்.

கரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி/ஒலி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு பொதுமக்கள், மாணவர்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் விழாவை காண நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி/ வானொலியில் கண்டும், கேட்டும் மகிழுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in