நீர்வளத்துறைக்கு பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு? #TNBudget2022

நீர்வளத்துறைக்கு பட்ஜெட்டில்
எவ்வளவு நிதி ஒதுக்கீடு? #TNBudget2022

தமிழக நிதிநிலை அறிக்கையில் நீர்வளத்துறை தொடர்பாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாராஜன் பேசுகையில், "நடப்பாண்டில் கால்வாய்கள், ஏரிகள், நீர்நிலைகளையும் நீர் வழித்தடங்களையும் மறுசீரமைத்தல், தடுப்பணைகள், கதவணைகள், தரைகீழ் தடுப்பணைகள் போன்ற நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், "இதற்காக, இம்மதிப்பீடுகளில் 2,787 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்வளங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், சிறப்பாக மேலாண்மை செய்வதற்காகவும்,பாசனத்திற்காக நீரை தங்குதடையின்றி வழங்குவதற்காகவும், 3,384 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி வடிநிலப் பகுதியில் உள்ள பாசன அமைப்புகளில் நீட்டித்தல், புனரமைத்தல், நவீனமயமாக்குதல் போன்ற பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன" என்று கூறினார்.

"சாத்தனூர், சோலையார், மேட்டூர், பாபநாசம் உள்ளிட்ட 64 பெரிய அணைகளை புனரமைக்கவும், அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் இரண்டாம் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்கு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலகவங்கி மற்றும் ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் 1,064 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக, இம்மதிப்பீடுகளில் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், "வரும் குறுவை சாகுபடிக்கு கடைமடைப் பகுதிகள் வரை காவிரி நீர் சென்றடைய, டெல்டா பகுதியிலுள்ள 10 மாவட்டங்களில் 80 கோடி ரூபாய் செலவில் 4,964 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்களை தூர்வாரும் சிறப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்புதலை இந்த அரசு அளித்துள்ளது. இவ்வாண்டு முன்கூட்டியே திட்டமிடுதல் மூலம், பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பதற்கு முன்னரே இந்தப் பணிகள் துரிதமாக நிறைவேற்றப்படும். இம்மதிப்பீடுகளில் நீர்வளத்துறைக்கு 7,338.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in