நான் தற்போது வரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருக்கிறேன் என்று நித்யானந்தா கூறியுள்ளார்.
பாலியல், கடத்தல் உள்ளிட்ட வழக்குகளுக்குப் பயந்து வெளிநாடு தப்பி ஓடிய சாமியார் நித்யானந்தாவுக்கு சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த வாரங்களுக்கு முன்பாக அவர் மரணமடைந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதற்கு நித்யானந்தா மறுப்பு தெரிவித்தார். நான் சாகவில்லை, சமாதி நிலையில் இருக்கிறேன் என்று கூறியிருந்தார். மீண்டும் அவர் இறந்து விட்டதாக செய்தி சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
இதுகுறித்து நித்யானந்தா நேற்று வெளியிட்ட பதிவில் பதில் அளித்துள்ளார். அவர் பதிவில் கூறுகையில், “பரமசிவனின் ஆசிகள். அன்புள்ள பக்தர்கள் மற்றும் அன்பான சீடர்கள், கைலாசாவாசிகள் நான் தற்போது வரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருக்கிறேன். மேலும் உங்கள் அனைவரையும் உள் இடத்தில் இணைக்கிறேன். மிக விரைவில் உடலில் குடியேறி வழக்கமான சத்சங்கங்கங்களை மேற்கொள்வேன். மேலும், உயர்ந்த கொள்கைகள் மற்றும் மகா கைலாசாவின் அசாதரணமான ஆற்றலைப் பகிர்ந்து கொள்வேன்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே நித்யானந்தா மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக இந்தியா திரும்ப உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. ஜூன் 14-ம் தேதிக்கு முன்பாக நித்யானந்தா திருவண்ணாமலைக்கு வந்து சேருவார் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.