
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவின்போது, வடகலை பிரிவினர் வேத பாராயணம் செய்ய அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இதில் பழைய நிலையே தொடர வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான ஒன்றாகக் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அழைக்கப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அத்தி வரதர் வைபவம் உலக அளவில் ஆன்மிக பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வைகாசி மாதத்திலும் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். ஒவ்வொரு பிரம்மோற்சவத்தின்போதும், வடகலை மற்றும் தென்கலை பிரிவினர்களுக்கிடையே மோதல் வெடிக்கும். கரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக வைகாசி பிரமோற்சவம் நடைபெறவில்லை.
இந்த ஆண்டு நடைபெற்ற பிரமோற்சவத்தை முன்னிட்டு மே 14-ம் தேதி இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘வடகலை பிரிவினர் வேதபாராயணம் செய்வதற்கு அனுமதி இல்லை’ எனத் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
‘வடகலை, தென்கலை பிரிவினருக்கிடையேயான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஒரு பிரிவினருக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது சட்டவிரோதம்’ என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில் ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இந்த விவகாரத்தில் தினசரி பிரச்சினை ஏற்படுவதாலும், சாதாரண பக்தர்கள் முறையாகத் தரிசிக்க முடியாததாலும், அதை ஒழுங்குபடுத்துவதற்காகவே ஆணையரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி எம்.எஸ். சுப்பிரமணியம், “ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றாலும், தென்கலை பிரிவினருக்கு மட்டும் பிரபந்தம் பாட அனுமதித்தது பாரபட்சமானது. அறநிலையத் துறையின் புதிய உத்தரவு பிறப்பிக்கும் முன்பு உள்ள நிலையே தொடர வேண்டும்“ என உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை நாளையும் தொடர்கிறது.