காலில் விழுந்து மனு கொடுத்த விவசாயி: நேரில் சென்று விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர்!

காலில் விழுந்து மனு கொடுத்த விவசாயி: நேரில் சென்று விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர்!

போலி ஆவணம் தயாரித்து விற்கப்பட்ட தன்னுடைய விவசாய நிலத்தை மீட்டுத் தருமாறு காலில் விழுந்து விவசாயி அளித்த புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாராயணசாமி. இவர் கடந்த திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கச் சென்றிருந்தார். வரிசையில் நின்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போது திடீரென அவரது காலில் நாராயணசாமி விழுந்தார். உடனே மாவட்ட ஆட்சியர் அமர்னுஷ்வாஹா அவரை தூக்கிவிட்டுச் சட்டெனத் தரையில் அமர்ந்து இதுபோன்று காலில் விழக்கூடாது என அறிவுரை வழங்கினார். பின்பு அவரிடம் குறைகளைப் பரிவுடன் கேட்டறிந்தார்.

அப்போது, ''தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை உறவினர்களிடம் குத்தகைக்கு விட்டிருந்த நிலையில், அதனை அவர்கள் போலி ஆவணம் தயாரித்து விற்றுவிட்டனர். நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என நாராயணசாமி கோரிக்கை விடுத்தார். அப்போது நேரில் வந்து விசாரணை நடத்துவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். அதன்படி நேற்று வள்ளிப்பட்டு கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று நாராயணசாமி அளித்த புகார் குறித்து விசாரணை செய்தார். விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரே நேரில் வந்து விசாரணை நடத்தியதில் அந்த விவசாயி மகிழ்ச்சி அடைந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in