
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் திருச்சிக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து கார் மூலம் தஞ்சை செல்கிறார்.
நிகழ்ச்சி முடிந்து பின்னர் திருச்சி திரும்பி விமானம் மூலம் சென்னை வருகிறார். எனவே, பாதுகாப்பு கருதி திருச்சி மாவட்டத்தில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் திருச்சிக்கு அவர் பயணம் செய்யும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.