
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.1000 இந்த மாதம் 10ம்தேதி தகுதியானவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 60 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டனர்.
இந்த திட்டத்தை கடந்த செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கடந்த மாதம் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 14ம் தேதியே குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில், இம்மாதம் தீபாவளி பண்டிகை நவ.12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளி செலவுகளைச் சமாளிக்கும் வகையில் முன்கூட்டியே 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் குடும்பத் தலைவிகள் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே பெண்களுக்கான உரிமைத் தொகையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், வரும் 10-ம் தகுதியானவர்கள் வங்கிகளில் பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.