சித்திரைத்திருவிழாவின் போது ஆற்றில் இறங்கி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மூதாட்டி மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் என அடையாளம் தெரிந்தது.
மதுரை சித்திரைத் திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இதில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஆற்றில் இறங்கியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் மூதாட்டி உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்த மூதாட்டி யார் என அடையாளம் தெரியாததால் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் மதுரை செல்லூர் நாககன்னி கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயலட்சுமி என தெரிய வந்தது. அவரது தங்கையின் கணவர் சந்திரன் போலீஸாரிடம் அடையாளம் காட்டினார்.