ஸ்விகி ஊழியரிடம் அலைபேசியில் ஆறுதல் சொன்ன சைலேந்திர பாபு!

ஸ்விகி ஊழியரிடம் அலைபேசியில் ஆறுதல் சொன்ன சைலேந்திர பாபு!

கோவையில் போக்குவரத்து காவலரால் தாக்கப்பட்ட ஸ்விகி நிறுவன ஊழியரிடம் தமிழகக் காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு பேசி ஆறுதல் கூறியிருக்கிறார்.

நேற்று கோவை பீளமேடு போக்குவரத்து காவலர் சதீஷ் , பெண் ஒருவரின் வாகனம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற பள்ளி வாகன ஓட்டியிடம் நியாயம் கேட்டதற்காக ஸ்விகி பணியாளர் மோகனசுந்தரம் என்பவரை கன்னத்தில் அறைந்தார். இந்த நிகழ்வு குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. இதையடுத்து காவலர் சதீஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் கைது செய்யப்பட்டு காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இது குறித்த தகவல்களை, தமிழ்நாடு காவல் துறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் இன்றைய தினம் பகிர்ந்திருக்கிறார் காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபு. அதில், ‘இந்தச் சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டது. காவலர் மீது கிரிமினல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மோகனசுந்தரத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கையை தெரிவித்து அவர் நலம்பெற வாழ்த்தினேன்' என்று சைலேந்திர பாபு தெரிவித்திருக்கிறார்.

போக்குவரத்து காவலர் செய்த தவறுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்ததுடன், பாதிக்கப்பட்ட நபரிடம் அலைபேசி வழியாக உரையாடி, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பகிர்ந்துகொண்ட தமிழகக் காவல் துறைத் தலைவரின் செயல் பலராலும் வியந்து பாராட்டப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in