ஸ்பா, மசாஜ் சென்டர்களை இனி சிசிடிவி கண்காணிக்கும்!

கேமராக்களை பொருத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
டிஜிபி சைலேந்திர பாபு
டிஜிபி சைலேந்திர பாபு Hindu கோப்பு படம்

தமிழகத்தில் உள்ள ஸ்பா, மசாஜ் உள்ளிட்ட சென்டர்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரத்தில் உள்ள தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் செயல்பாடுகளில் காவல்துறை தலையிடக்கூடாது என உத்தரவிடக் கோரி அதன் நிர்வாகி கிரிஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆயுர்வேத சிகிச்சை மற்றும் மஜாஜ் மையங்கள் ஆகியவை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வருவதால் காவல்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதை தடுக்க முடியாது. காவல்துறையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்லாமல், குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணமாகவும், அவற்றை ஊக்குவிப்பதாகவும் அமைந்துவிடும். சென்னை மாநகராட்சியில் உள்ளது போல தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டுமென தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தது.

மேலும், இதுபோன்ற இடங்களில் சட்ட விரோத செயல்பாடுகள் நடைபெறாமல், வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். அவ்வாறு கண்காணிக்கும்போது, மையங்களின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமாக இருந்தாலோ, தகவல்கள் கிடைத்தாலோ, சட்டவிதிகளை பின்பற்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயரதிகாரிகள், காவல்துறை ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ``தமிழகத்தில் உள்ள ஸ்பா, மசாஜ் உள்ளிட்ட சென்டர்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என அறிவுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in