மாற்றுத்திறனாளி மரணம்- சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

பிரபாகரன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்twitter

மாற்றுத்திறனாளி பிரபாகரன் உயிரிழந்தது குறித்த வழக்கு விசாரணையைக் குற்றப் புலனாய்வுத்துறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவர் கடந்த நவம்பர் மாதம், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் உள்ள மளிகைக்கடை உரிமையாளர் வீட்டில் தங்க நகைகளைத் திருடியதற்காக அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இவ்வழக்கில் தொடர்புடைய மாற்றுத்திறனாளி பிரபாகரன் மற்றும் அவரது மனைவி ஹம்சா ஆகியோர் சேந்தமங்கலம் காவல்துறையினரால் கடந்த 11ம் தேதி கைது செய்யப்பட்டு, நாமக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி அன்று மாற்றுத்திறனாளி பிரபாகரன் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்ததன் அடிப்படையில், அவர் சிகிச்சைக்காக உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, பின்பு தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை நரம்பியல் துறையில், அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்று இரவு 11.40 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக, சேலம் சரக டிஐஜி (பொறுப்பு) சேந்தமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் இருவரையும், தலைமைக் காவலர் ஒருவரையும் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையுற்று, உயிரிழந்த மாற்றுத் திறனாளி பிரபாகரன் குடும்பத்துக்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிடவும், ஆணையிட்டுள்ளார். மேலும் மாற்றுத்திறனாளி பிரபாகரன் உயிரிழந்தது குறித்த வழக்கு விசாரணையைக் குற்றப் புலனாய்வுத்துறைக்கு மாற்றிடவும் (CBCID) உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in