
டிடி பொதிகை எனும் பெயரை, டிடி தமிழ் என மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் எல்.முருகன், இன்று சென்னை சேப்பாக்கத்தில் செய்தியார்களை சந்தித்து தமிழகத்தில் மத்திய தகவல் தொடர்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார்.
அவர் கூறுகையில், முன்பு அனைவரும் தூர்தர்சன் எனப்படும் டிடி பொதிகை தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டு இருந்தோம். தற்போது மீண்டும் டிடி பொதிகை தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளோம். ஜனவரி மாதம் 14 முதல் டிடி பொதிகை எனும் பெயரை, டிடி தமிழ் என மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதே போல, இனி எங்கள் டிடி நிருபர்கள் அடுத்ததாக களத்தில் இறங்கி செய்தி சேகரிக்க உள்ளனர். இனி அவர்களும், முதல்வர் முதல் அனைவரிடத்திலும் கேள்வி கேட்பர். இதற்காக வெளியில் இருந்து தற்போது ஆட்களிடம் பேசி வருகிறோம். விரைவில் நிரந்தரமாக ஆட்களை நியமிப்போம். பிரதமர் மோடி குறிப்பிட்டது போல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்போம் என தூர்தர்சன் பொதிகை சேனலில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றங்கள் குறித்து பேசினார்.
அடுத்து தமிழக மீனவர்கள், தொடர்ந்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இது நமது நாடு மட்டும் தொடர்புடைய பிரச்சனை அல்ல. இந்த பிரச்சனையில் இரு நாட்டு தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது” என செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.