`என் தம்பி மகளுக்கு சீட் கொடுக்க மறுத்தது டிஏவி பள்ளி'- நினைவலையை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்

`என் தம்பி மகளுக்கு சீட் கொடுக்க மறுத்தது டிஏவி பள்ளி'- நினைவலையை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்

``என்னுடைய தம்பியினுடைய மகள் பூங்குழலிக்கு டி.ஏ.வி. பள்ளியில் சீட் கேட்டபோது கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள்'' என்று நினைவலைகளை பகிர்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

சென்னை பள்ளிக்கரணையில் டி.ஏ.வி. கல்விக் குழுமத்தின் புதிய பள்ளியை திறந்து வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “1970-ம் ஆண்டு தொடங்கிய ஆர்ய சமாஜ் கல்விச் சங்கத்தின் சார்பில் சென்னையில் டி.ஏ.வி. பள்ளிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. தற்போது, டி.ஏ.வி குழுமத்தின் சார்பில், 8 சுய பள்ளிகள், 2 அரசு உதவி பெறும் பள்ளிகள், 3 நிர்வகிக்கப்படும் பள்ளிகள், 1 தொழிற்பயிற்சி மையம் ஆகியவை நடத்தப்படுகிறது. இதில் சுமார் 30 ஆயிரம் மாணவ- மாணவியர்கள் படித்து வருகிறார்கள். சென்னையில் முகப்பேர், கோபாலபுரம், கில்நகர், செளகார்பேட்டை, வியாசர்பாடி ஆகிய இடங்களைத் தொடர்ந்து, இப்போது பள்ளிக்கரணையிலும் தொடங்கப்பட்டிருக்கிறது.

கடந்த அறுபது ஆண்டு காலத்தில் லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் வாழ்வில் ஒளியேற்றிய கல்வி நிலையமாக டி.ஏ.வி குழுமம் செயல்பட்டு வருவதற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை, வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கோபாலபுரம் என்பது நான் பிறந்த, வளர்ந்த பகுதி. அந்தப் பகுதியில் முதல் பள்ளி 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மூன்றாவது பள்ளிக்கூடத்தை அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் 1989-ம் ஆண்டு முகப்பேரில் தொடங்கி வைத்தார். இப்போது பள்ளிக்கரணையில் இந்தப் பள்ளியை நான் தொடங்கி வைக்க வந்திருக்கிறேன்.

ஆனால், டி.ஏ.வி. பள்ளியில் சீட் வாங்குவது மிகவும் கடினம், எனக்கு அனுபவமே உண்டு. என்னுடைய மகள் செந்தாமரையை கோபாலபுரத்தில் இருக்கக்கூடிய டி.ஏ.வி. பள்ளியில் தான் சேர்த்தோம். அதைத் தொடர்ந்து, என்னுடைய தம்பியினுடைய மகள் பூங்குழலிக்கு பள்ளியில் சீட் கேட்டபோது கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள். அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறோம். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், அவ்வளவு strict ஆக கல்வியைப் பொறுத்தவரைக்கும் நடைபோட்டுக் கொண்டிருக்கக்கூடிய ஒரு சிறப்புக்குரிய பள்ளியாக விளங்கிக் கொண்டிருக்கிறது இந்த டி.ஏ.வி. பள்ளி. அதற்குப் பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு சீட் வாங்கி விட்டோம்.

ஆகவே, இந்த டி.ஏ.வி. பள்ளிக்கு வருகிறபோது, இதற்கும் எனக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது என்பதற்காகத் தான் சுட்டிக்காட்டினேனே தவிர, வேறு ஏதோ விமர்சித்து பேச வேண்டும், அதைக் குறை சொல்லிப் பேச வேண்டும் என்பதற்காக நான் சொல்லவில்லை, அதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி. இப்போது இந்த பள்ளிக்கரணை பள்ளியை தொடங்கி வைத்திருக்கிறேன் என்று சொன்னால், அரசுப் பள்ளியாக இருந்தாலும், அரசு உதவி பெறும் பள்ளியாக இருந்தாலும், இதுபோன்ற சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக இருந்தாலும், கல்விக் கண் திறக்கும் சாலைகளாக அமைந்திருப்பதால் இவை மேலும் மேலும் வளர வேண்டும். வளர்ந்து மாணவ, மாணவியருக்குக் கல்வித் திறமையை மேம்படுத்த வேண்டும் என்று நினைப்பவன் நான். தமிழக அரசு, கல்விக்கு முக்கியத்துவம் தரக்கூடிய அரசாக அமைந்திருக்கிறது. பள்ளிக் கல்வியோடு நிறுத்திவிடாமல் கல்லூரிக் கல்வியும், அதைத் தொடர்ந்து உயர்கல்வியும் கொடுக்கும் அரசாக தமிழக அரசு திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தயானந்தா ஆங்கிலோ வேதிக் என்பதன் சுருக்கமாக டி.ஏ.வி என்பது அமைந்திருக்கிறது. ஆன்மிகவாதியாக இருந்தாலும் - மதத்தில் சீர்திருத்தம் பேசியவர்தான் தயானந்தர் அவர்கள். உருவ வழிபாட்டை நிராகரிக்கக் கூடியவராகவும், மதத்தின் பெயரால் நடக்கக்கூடிய மோசடிகளையும் கண்டிப்பவராகவும் அவர் இருந்திருக்கிறார். மகளிருக்கு சம உரிமை, பெண்கல்வி, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அந்தக் காலத்தில் இருந்த குழந்தைத் திருமணத்தை கடுமையாக எதிர்த்திருக்கிறார். விதவை மறுமணத்தை ஆதரித்தார். அந்த வகையில் 150 ஆண்டுகளுக்கு முன்பே மிகப்பெரிய சீர்திருத்தவாதியாகவும் இருந்தவர் தான் தயானந்தர் அவர்கள்.

திரும்பத் திரும்ப தயானந்தர் வலியுறுத்தியது உண்மையைத்தான். ''எப்பொழுதும் உண்மையைப் பேசுபவன், நல்லொழுக்கத்தின் கட்டளைகளின்படி செயல்படுபவன், மற்றவர்களை நல்லவர்களாகவும் மகிழ்ச்சியாகவும் ஆக்க முயல்பவன் நல்லவனும் ஞானம் உள்ளவனும் ஆவான்'' என்று அவர் சொல்லியிருக்கிறார். உண்மை, ஒழுக்கம் ஆகியவற்றை தயானந்தர் அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

அதேபோல் மாணவ, மாணவியரும் உண்மையுடமும் ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர வேண்டும். தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் தனித்திறமைகளும், அறிவாற்றலில் கூர்மையும், உண்மையும், நேர்மையும் உள்ளவர்களால் எளிதில் முன்னேற முடியும். அத்தகைய நோக்கத்தை வளர்ப்பதாக இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும்.

அதே நேரத்தில், இன்னொரு முக்கியமான வேண்டுகோளை இங்கு வைப்பது எனது கடமையாக நான் கருதுகிறேன். தாய்மொழிக் கல்விக்கு ஊக்கம் அளிப்பவையாக உங்களைப் போன்ற கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். அதேபோல், உங்களது மிகச்சிறந்த திட்டங்களுக்கு தமிழ்ப் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். தாய்மொழிப் பற்றும், தாய்நாட்டுப் பற்றும், ஒவ்வொரு மனிதருக்கும் மிகமிக முக்கியம் என்ற வகையில் இந்த வேண்டுகோளை உங்களிடத்தில் நான் வைக்கிறேன்'' என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in