
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டத்தை வனத்துக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை தொண்டாமுத்தூர் பகுதி மலை அடிவார கிராமங்களுக்கு அடிக்கடி காட்டு யானைகள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், தீத்திபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த 14 யானைகள், உணவுக்காக தக்காளி, வாழை மற்றும் ரேஷன் கடைகளிலிருந்து அரிசி உள்ளிட்டவற்றை உட்கொண்டு விட்டு சென்றுவிட்டன.
இந்த நிலையில் யானைகள் மீண்டும் நேற்று இரவு வனத்திலிருந்து வெளியே வந்துள்ளன. நள்ளிரவில் அய்யாசாமி மலையடிவாரத்தில் இருந்து வெளிவந்த யானைகள் அருகாமையில் உள்ள தோட்டங்களுக்குள் உலா வந்து கிராமப் பகுதிகளுக்கும் சென்றுள்ளன.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை விரைந்து சென்று மூன்று குழுக்களாக பிரிந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அந்த யானைகள் செல்லப்ப கவுண்டன்புதூர் பகுதி வழியாக சென்று அடர் வனத்துக்கு முன்பாக உள்ள புதர் காட்டில் தஞ்சமடைந்துள்ளன.
இந்த யானைகளை விரட்டுவதற்கு வனத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்ட நிலையில், மூன்று குழுக்கள் போதாது என்றும் கூடுதலாக வனத்துறை குழுக்களை அமைத்து யானைகளை விரட்ட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வனத்தில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியே வருவதால் பெரும் பீதியில் பொதுமக்கள் உள்ளனர். வனத்தில் இருந்து வெளியே வந்த காட்டு யானைகளை விரட்டும் வனத்துறை இனி யானைகள் ஊருக்குள் வராத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்; வங்கக்கடலில் நாளை உருவாகும் 'மிதிலி' புயல்: வானிலை மையம் எச்சரிக்கை!
இயக்குநர் மணிவண்ணன் மரணத்திற்கு இதுதான் காரணமா?: 10 ஆண்டுகளுக்குப் பின் வெளியான உண்மை!
'இந்த அரண்மனை வாடகைக்கு விடப்படும்': ஜோத்பூர் இளவரசியின் சுயதொழிலால் கரன்சி மழை!
உத்தரப் பிரதேசத்தில் டெல்லி-சஹர்சா வைசாலி அதிவிரைவு ரயிலில் தீவிபத்து... 19 பேர் காயம்