
தீபாவளி முடிந்த பின்னரும் கூட, ஆஃபர்கள் தொடர்வதால் ஈரோடு வீதிகளில் துணிகளை வாங்க மக்கள் கூட்டம் நேற்றும் அலைமோதியது.
தீபாவளியையொட்டி கடந்த ஒரு மாதமாகவே ஈரோடு மாநகர பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. ரோட்டோரத்தில் கடைகள் அமைத்தும் ஏராளமான சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்தனர். தீபாவளி முடிந்ததால் நேற்று வியாபாரம் இல்லாமல் கடைகள் காத்தாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றும் ஆர்.கே.வி. சாலையில் உள்ள சில ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அங்குள்ள சில ஜவுளிக்கடைகளில் நேற்றும் மலிவு விலையில் ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டன. 5 சர்ட் ரூ.1,000 எனவும், 3 பேன்ட் ரூ.1,000 எனவும் இந்த கடைகளில் விற்கப்பட்டது. இதனால் நேற்று அதிகாலை முதலே தள்ளுபடி விலையில் ஜவுளிகள் வாங்க மக்கள் அதிக அளவில் திரண்டு போட்டி போட்டு துணிகளை வாங்கிச்சென்றனர்.
மக்கள் கூட்டம் அலைமோதியதால் கடைவீதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல, சாலையோர கடைகளிலும் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்ட காலணி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் திரண்டது.
தீபாவளியையொட்டி 'ஸ்டாக் கிளியரன்ஸ்' செய்வதற்காக சில கடைக்காரர்கள் இதுபோன்று மலிவு விலையில் ஜவுளிகளை விற்பனை செய்து வருகிறார்கள் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.