
கோவையை சேர்ந்த 10 வயது சிறுமி அதிகாலை ஆறு மணி முதல் மதியம் 12 மணி வரை தொடர்ந்து சிலம்பம் சுழற்றி உலக சாதனை செய்துள்ளார்.
கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் மற்றும் ரதிதேவி தம்பதியிரின் மகள் கவிநிலவு. 10 வயது சிறுமியான இவர், அதே பகுதியில் உள்ள முல்லை தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் சிலம்பம் கற்று வருகிறார். சிறு வயது முதலே சிலம்பம் சுற்றுவதில் ஆர்வமுடைய இவர், ஒற்றை கம்பு வீச்சில் அலங்கார சிலம்பத்தை தொடர்ந்து ஆறு மணி நேரம் சுழற்றி சாதனை படைத்துள்ளார்.
சின்னவேடம்பட்டி,மகாலட்சுமி அம்மன் கோவில் வளாகத்தில் இந்த சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை ஆறு மணி முதல் மதியம் 12 மணி வரை தொடர்ந்து சிலம்பம் சுழற்றிய இவரது இந்த சாதனை இந்தியா உலக சாதனை புத்தகம், அமெரிக்கன் உலக சாதனை புத்தகம் மற்றும் யுரோப்பியன் உலக சாதனை புத்தகம் என மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது. சிறுமி கவிநிலவு செய்த இந்த சாதனையை அங்கீகரித்து இந்தியா உலக சாதனை புத்தகத்தின் மாவட்ட தலைவர் பிரகாஷ் ராஜ் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.