
முதற்கட்டமாக தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் மத்திய அரசு சார்பில் தேங்காய் எண்ணெய் விற்பனை தொடங்கப்படும் என வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி அறிவித்திருக்கிறார்.
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்துவருகிறது. அனைத்து ரேஷன் கடைகளிலும் மானிய விலையில் வழங்கப்படும் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.
பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்கினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும், இதன் மூலம் தென்னை விவசாயிகளும் பயன் அடைவார்கள் என்றும் விவசாய சங்கங்கள் சார்பில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
முதற்கட்டமாக தமிழகத்தின் குறிப்பிட்ட ஆறு மாவட்டங்களில் இருக்கும் ரேஷன் கடைகளில் விரைவில் மத்திய அரசு சார்பில் தேங்காய் எண்ணெய் விற்பனை தொடங்கப்படும் எனவும், பொதுமக்கள் அளிக்கும் வரவேற்பைப் பொறுத்து இதனை தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்துவது பற்றி பரிசீலித்து முடிவு செய்யப்படும் எனவும் மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி அறிவித்திருக்கிறார்.
இதனால், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது. இந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் குறைந்த விலையில் தேங்காய் எண்ணெய் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.