வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் வரும் 18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூரில் கனமழை பெய்யக்கூடும். மே 15, 16 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மே 17, 18 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்றும், நாளையும் கேரளம், லட்சத்தீவு, குமரிக்கடல், வங்கக்கடலில் தென்மேற்கு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். மே 16-ம் தேதி லட்சத்தீவு, கேரளம், அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு இருக்கிறது. மணிக்கு 40 - 50 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.