தேனி மாவட்டம் சுருளி அருவி பகுதியில் யானைகள் நடமாட துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் இந்த பகுதிகளுக்குச் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ளது சுருளி அருவி. வனப்பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த அருவியில் குளித்து மகிழ நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இதே போல் அருவியை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டமும் அவ்வப்போது இருக்கும்.
இதனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர், வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் நிலையில் சுற்றுலா பயணிகளை அருவிக்கு செல்ல அனுமதிப்பது இல்லை. இந்நிலையில் நேற்று காலை முதல் சுருளி அருவியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் யானைகள் முகாமிட்டிருந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு செல்லவும், அங்கு குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேலும் யானைகள் வேறு இடத்திற்கு சென்ற பின்னரே அருவியில் குளிக்க அனுமதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். வனத்துறையினரின் இந்த தடையினால், வார விடுமுறை நாளான நேற்று சுருளி அருவிக்கு குளிக்க வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.