`சிறைத்துறை டி.ஐ.ஜி-யிடம் மேல் முறையீடு செய்யலாம்'- அரசின் பதிலால் மனுவை வாபஸ் பெற்றார் நளினி

`சிறைத்துறை டி.ஐ.ஜி-யிடம் மேல் முறையீடு செய்யலாம்'- அரசின் பதிலால் மனுவை வாபஸ் பெற்றார் நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனுக்கு பரோல் கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பரோல் வழங்கக் கோரிய வழக்கை நளினி வாபஸ் பெற்றார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருக்கிறேன். ஆனால் வேலூர் சிறையில் இருக்கும் கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை. 31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தங்களை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் விடுதலை தீர்மானத்தின்படி இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

மருத்துவ காரணங்களுக்காக கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கக் கோரி மே 26-ம் தேதி தானும், மே 21-ம் தேதி தனது தாய் பத்மாவும் தமிழக அரசிடம் மனு அளித்தோம். அவை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. தனது கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, சிறையில் இருந்தபோது குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதால் முருகனுக்கு பரோல் கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், அதை எதிர்த்து சிறைத்துறை டி.ஐ.ஜி-யிடம் மேல் முறையீடு செய்யலாம் எனவும் சிறைத்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா தெரிவித்தார்.

இதையடுத்து, சிறைத்துறை டி.ஐ.ஜி-யிடம் மேல் முறையீடு செய்யும்படி அறிவுறுத்தியதை அடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக நளினி தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in