
அம்மா உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது ஃபால்ஸ் சீலிங் இடிந்து விழுந்து காயம் ஏற்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பேருந்து நிலையம் உள்ளே கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் வெளியூர் பயணிகள், ஏழை, எளிய பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். அப்படி அம்மா உணவகத்தில் சாப்பிட்ட தம்பதிகள் மீது மேற்கூரையின் ஃபால்ஸ் சீலிங் இடிந்து விழுந்து காயம் ஏற்பட்டது.
குளச்சல் காமராஜர் சாலையை சேர்ந்தவர் சேவியர் (57), அவரது மனைவி மல்லிகா (52). இவர்கள் இருவரும் குளச்சல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் அம்மா உணவகத்தில் சாப்பிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று உணவகத்தில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக உணவகத்தின் மேற்கூரையின் ஃபால்ஸ் சீலிங் திடீரென உடைந்து விழுந்தது. சீலிங்கிற்கு நேர் கீழே அவர்கள் நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
உடைந்த சீலிங் பாகம் அவர்கள் மீது விழுந்தது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதை பார்த்ததும் அப்பகுதியினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.