முன்னறிவிப்பின்றி விமானம் ரத்து...விமான நிலையத்தில் 12 மணி நேரம் தவித்த பயணிகள்!

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

முன்னறிவிப்பின்றி சிங்கப்பூர் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையத்தில் 12 மணி நேரமாக பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

சிங்கப்பூர் விமானம்
சிங்கப்பூர் விமானம்

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.40 மணிக்கு புறப்பட இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய 168 பயணிகள் இரவு 11 மணிக்கே விமான நிலையத்துக்கு வந்து சோதனைகளை முடித்துவிட்டு தயாராக இருந்தனர்.

அந்த விமானம் வழக்கமாக இரவு 11.45 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்துவிட்டு மீண்டும் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நள்ளிரவு 1.40 மணிக்கு புறப்பட்டு செல்லும். சிங்கப்பூரில் இருந்து விமானம் சென்னைக்கு வந்துவிட்டது.

ஆனால் அந்த விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டு இருப்பதாகவும், அதை சரி செய்த பின் விமானத்தை இயக்க வேண்டும் என்றும் விமானி குறிப்பு எழுதி வைத்துவிட்டு சென்று விட்டார்.

விமான நிலையம்
விமான நிலையம்

இதையடுத்து விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று காலை 6 மணி வரையிலும் விமானம் புறப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், விமான நிறுவன கவுன்ட்டரை சூழ்ந்து கொண்டு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

இதனால் பயணிகளை அமைதிப்படுத்திய அதிகாரிகள், விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு சரி செய்யப்படவில்லை. அதனை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. சரி செய்யப்பட்ட பிறகு விமானம் புறப்படும் என்றனர்.

இதனால் சிங்கப்பூர் செல்ல வேண்டிய 168 பயணிகளும் சென்னை விமான நிலையத்தில் பரிதவித்தனர். அத்துடன் தங்குவதற்கு சரியான இடம் இல்லாமலும், பசியாலும் அவர்கள் அவதிப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு சரி செய்யப்பட்டு நேற்று மதியம் 1.45 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது. இதனால் 12 மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in