‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வரைபடம் விரைவில் வெளியீடு: சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி

‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வரைபடம் விரைவில் வெளியீடு: சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி

வெகு விரைவில் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான கட்டமைப்பு வரைபடம் வெளியிடப்படும் என்றும், 2 மாதங்களில் கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் பணிகள் தொடங்கும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மதுரை அருகே கொட்டாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தினர்.

அதன்பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. மதுரை மாவட்டத்தில் 3,413 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் முதல் தவணை தடுப்பூசி 94.68 சதவீதம் பேருக்குச் செலுத்தப்பட்டது. இரண்டாம் தவணை தடுப்பூசி 85.47 சதவீதம் பேருக்குச் செலுத்தப்பட்டது. மதுரையைப் பொறுத்தவரையில் 18 வயதைத் தாண்டியவர்களுக்கு 86.3 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 70.6 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ‘பூஸ்டர்’ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்கள் எண்ணிக்கை சதவீதம் 40 சதவீதம் அளவிற்கு வந்துள்ளது. மதுரையில் 65,653 பேருக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 910 தடுப்பூசிகள் கையிருப்புள்ளது. ஒரு லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்து தடுப்பூசி போடும்பணி நடக்கிறது. தமிழத்தில் 76 லட்சத்து 89 ஆயிரத்து 40 பேருக்குத் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது” எனக் கூறினார்.

மேலும், “மாநகராட்சிப் பகுதிகளில் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளை போல் புதிய மருத்துவமனைக் கட்டமைப்புகளை உருவாக்க முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். மிக விரைவில் மாநகரப் பகுதியில் கட்டப்படும் அந்த மருத்துவமனைகள் திறக்கப்படும்.

புதிதாக மாநிலத்தில் கட்டப்பட உள்ள 25 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதாரங்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது. மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மற்றும் கல்லூரிக்கான பணிகள் கடந்த 2 ஆண்டாக எதுவும் நடக்காமல் இருந்தது. தமிழக முதலமைச்சர் தொடர்ச்சியாக மத்திய அரசிடம் கேட்டு பெற்றதன் விளைவாக மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரிக்கான 50 மாணவர்கள் தற்போது ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாகச் சேர்க்கப்பட்டு படிக்கின்றனர்.

விரைவில் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான கட்டமைப்பு வரைபடம் வெளியிடப்பட இருக்கிறது. 2 மாதங்களில் கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் பணிகள் தொடங்கும். 5, 6 மாதங்களில் கட்டுமானப் பணி தொடங்கிவிடும்” என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.

கரோனா பெருந்தொற்றின் தற்போதைய நிலவரம் குறித்துப் பேசுகையில், “தமிழகத்தில் கரோனா பாதிப்பு தற்போது 2,500 பேருக்கு இருந்தாலும் உயிரிழப்பு இல்லை. ஒரு வாரத்திற்கு முன் ஒருவர் சென்னையில் உயிரிழந்தார். அவர் துணை நோயால் உயிரிழந்தார். தஞ்சாவூரில் தற்காலைக்கு முயன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது நோய்த்தொற்று ஏற்பட்டு ஒருவர் இறந்தார். கரோனா பாதிப்பால் நேரடியாக யாரும் கடந்த 3, 4 மாதங்களில் உயிரிழக்கவில்லை.

அரசு மருத்துவமனைகளில் உள்ள 4,308 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்குப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. எம்ஆர்பி (Medical recruitment board) தற்போது பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடத்துவது, சான்றிதழ் சரிபார்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. செப்டம்பர் இறுதிக்குள் 1,021 மருத்துவர்கள் உள்பட 4,308 பணியிடங்கள் நிரப்படும்” என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in