"முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது 2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
`கால் காசு சம்பளம் என்றாலும் சர்க்கார் சம்பளம்’ வாங்கணும் என்ற வார்த்தைக்கு ஏற்ப அரசு வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கின்றனர் பலர். அதே நேரத்தில், அரசு வேலையில் சேர்ந்தால் பணி செய்ய வேண்டாம், சரியான நேரத்திற்கு பணிக்கு செல்ல வேண்டாம் என்ற மனநிலை எழுந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. பலர், வருகை பதிவேட்டில் கையெழுத்துப்போட்டு விட்டு பணி நேரங்களில் தங்கள் சொந்த வேலைகளையும், வேறு பணிகளையும் செய்வதாகவும் புகார்கள் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த புகார் ஒருபுறம் இருக்க, அரசு ஊழியர்களுக்கு எதிராக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள்ள அரசு ஊழியர் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது 2-வது திருமணம் செய்யக்கூடாது என்றும் அவ்வாறு 2-வது திருமணம் செய்வது ஒழுக்கக்கேடானது என்றும் அரசு மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், அரசு ஊழியர் 2-வது திருமணம் செய்வதால் சட்ட ரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை என்றும் முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது 2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.