தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் வாக்குகள் குறைவு ?... தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் வாக்குகள் குறைவு ?... தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பதிவான மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. அத்துடன் தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். முதல் முறை வாக்காளர்கள் உற்சாகமாக வந்து வாக்களித்தனர். விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. ஆனால் அப்போதும் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. எனவே 6 மணிக்கு முன் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து, 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று 7 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பதிவான மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 72.44 சதவீத வாக்குகள் வதிவான நிலையில், தற்போது 3 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. சென்னையில் 3 தொகுதிகளிலும் கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in