`மாநிலத்தின் உரிமை கம்பீரமாக நிலை நாட்டப்பட்டுள்ளது; 6 பேர் விடுதலை குறித்து விரைவில் முடிவு'- முதல்வர் ஸ்டாலின்

`மாநிலத்தின் உரிமை கம்பீரமாக நிலை நாட்டப்பட்டுள்ளது; 6 பேர் விடுதலை குறித்து விரைவில் முடிவு'- முதல்வர் ஸ்டாலின்

மாநிலத்தினுடைய உரிமையானது இந்த தீர்ப்பின் மூலமாக மிக கம்பீரமாக நிலை நாட்டப்பட்டிருக்கிறது என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், "சட்ட வல்லுநர்களுடன் கலந்துபேசி மற்றவர்களையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகளை தமிழக அரசு எடுக்கும்" என்றார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், "32 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை இன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. இது வரலாற்றில் இடம் பெறக்கூடிய தீர்ப்பாக அமைந்திருக்கிறது. தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர்கள் வைத்த வாதங்களை முழுமையாக ஏற்றுக் கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 7 பேர் விடுதலையில் திமுக அரசு முனைப்போடு செயல்படும் என்பது திமுக தேர்தல் அறிக்கையில் 494-வது வாக்குறுதியாக இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான, மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளவன் விடுதலை என்பது வரவேற்கத்தக்கும் வகையில் அமைந்திருக்கும் அதே வேளையில் மாநிலத்தினுடைய உரிமையானது இந்த தீர்ப்பின் மூலமாக மிக கம்பீரமாக நிலை நாட்டப்பட்டிருக்கிறது. மாநில அரசுகளின் கொள்கையில், அதனுடைய முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்று நீதியரசர்கள் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். இது மிக மிக முக்கியமான ஒன்று. ஆளுநர் செயல்படாத நேரத்தில் நீதிமன்றம் தலையிடும் என்றும் தீர்ப்பில் நீதியரசர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசிடம் கேட்கத் தேவையில்லை என்பதையும் தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள் நீதியரசர்கள். அதன் மூலமாக மாநில அரசினுடைய அரசியல், கொள்கை முடிவுகளில் தனது அதிகார எல்லைகளைத் தாண்டி ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்பது மேலும் மேலும் உறுதியாகியிருக்கிறது.

மாநில சுயாட்சி கூட்டாட்சி தத்துவதற்திற்கு கிடைத்திருக்கக் கூடிய மாபெரும் வெற்றியாக அமைந்திருக்கிறது. 32 ஆண்டுகால வாழ்வை சிறைக் கம்பிகளுக்கு இடையே தொலைத்திருக்கக்கூடிய அந்த இளைஞர் இன்று விடுதலை காற்றை சுவாசிக்க இருக்கிறார். அந்த பேரறிவாளவனுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் வரவேற்பையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தனது மகனுக்கு இழைக்கப்பட்டிருக்கக் கூடிய அநீதியை கலைந்திட எந்த எல்லை வரை செல்ல முடியுமோ அந்த எல்லை வரை போராட தயங்காத அற்புதம்மாள் தாய்மையின் இலக்கணமாக விளங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை செல்ல விரும்புகிறேன். தாமதமாக கிடைத்திருந்தாலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது. மனித உரிமைகள் மட்டுமல்ல, மாநில உரிமைகளும் நிலைநாட்டப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்" என்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள், மீதமுள்ள 6 பேரின் விடுதலை குறித்து எழுப்பிய கேள்விக்கு, நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரம் இதுவரைக்கும் வரவில்லை. இன்று மாலையோ, நாளை காலையோ வர வாய்ப்பிருக்கிறது. அது வந்த பிறகு சட்ட வல்லுநர்களுடன் கலந்துபேசி மற்றவர்களையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகளை தமிழக அரசு எடுக்கும்" என்றார் முதல்வர் ஸ்டாலின்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in