
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம் 37.49 ஏக்கரில், 431.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள நிலையில், அதற்கான டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு
கடந்த ஜூன் 2-ம் தேதி நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "சென்னை நந்தம்பாக்கத்தில் வர்த்தக மையம் அமைந்திருந்தாலும், வளர்ந்து வரும் தேவைக்கும், எதிர்காலத் தேவைக்கும் போதுமானதாக இல்லை. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு 'கலைஞர் பன்னாட்டு அரங்கம்' சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய - உலகத்தரத்திலான மாநாட்டு அரங்கம், மிக பிரம்மாண்டமாக உலகத் தரத்தில் சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில் அமைக்கப்படும்" என்றார்.
இந்த நிலையில் கட்டிடக்கலை சேவைகளை வழங்குவதற்கான ஆலோசகரை தேர்வு செய்ய டெண்டர் கோரி உள்ளது பொதுப்பணித்துறை. 7.5 ஏக்கரில் பன்னாட்டு அரங்கம், 1.4 ஏக்கரில் திறந்தவெளி கண்காட்சி அரங்கம், 11.6 ஏக்கரில் வாகன நிறுத்த வசதி, திறந்த வெளி இடம், பூங்கா உள்ளிட்டைவைகள் அமைய உள்ளது.
இதைத் தவிர்த்து 2.07 ஏக்கரில் 4 நட்சத்திர விடுதி, 2.48 ஏக்கரில் promenade என்று அழைக்கப்படும் பல்வேறு விற்பனை இடங்கள், 4.1 ஏக்கரில் வாகன நிறுத்த வசதி, திறந்த வெளி இடம், பூங்கா, 2 உள்ளரங்க கூடம், 2 அரங்கம், 4 மாநாட்டு கூடம், 2 கூட்ட அரங்கு, ஒரு திறந்த வெளி அரங்கு என்று 21,788 பேர் அமரும் வகையில் இது அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.