தமிழக அரசுப் பணியாளர்கள் 25,000 பேர் ஒரே நேரத்தில் ஓய்வு பெறுகிறார்கள். இதையடுத்து டிஎன்பிஎஸ்சி மூலமாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 58லிருந்து 60 வயதாக உயர்த்தப்படும் எனக் கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அப்போது விமர்சனங்கள் எழுந்தன. பணி நீட்டிப்பு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலம் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சித் துறை, பள்ளிக் கல்வித் துறை என 30க்கும் மேற்பட்ட துறையில் 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. சுமார் 40 வருடங்களுக்கு முன்பாக மாணவர் சேர்க்கையின் போது, மாணவர்களின் பிறந்த தேதியை மே அல்லது ஜூன் மாதத்தில் பிறந்தது போல ஆரம்பப் பள்ளியில் பதிவு செய்து விடுவார்கள். தற்போதுதான் பிறப்பு சான்றிதழ் அடிப்படையில் பிறந்த தேதியைப் பதிவு செய்யும் நடைமுறை உள்ளது.
ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு சுமார் 80 லட்சத்திலிருந்து 1 கோடி வரை அரசு ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை அரசு செலுத்த வேண்டி இருக்கிறது. இதற்காக 5000 கோடியிலிருந்து 8000 கோடி வரை தமிழக அரசிற்குக் கூடுதல் செலவாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகக் காலிப்பணியிடங்களை நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.