கோகுல்ராஜ் கொலையில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

மார்ச் 8ம் தேதி தண்டனை விவரம் அறிவிப்பு
யுவராஜ்
யுவராஜ்

கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் வரும் 8ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்தார். கடந்த 2015-ம் ஆண்டு கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம், தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் 17 பேரை கைது செய்தனர். நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த வழக்கு விசாரணை, கோகுல்ராஜ் தாய் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சம்பத்குமார் இன்று தீர்ப்பளித்தார். அதன்படி, யுவராஜ், அருண், குமார், சங்கர், அருள்வசந்தம், செல்வகுமார், யுவராஜின் சகோதரர் தங்கதுரை, சதீஷ்குமார், பிரபு என்ற ஸ்ரீதர், ரஞ்சித் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை விவரம் வரும் 8ம் தேதி அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த வழக்கில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in