
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை அணிகள் மோதும் நிலையில் புள்ளி பட்டியலில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும் என்பதால் இந்த போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றாக பார்க்கப்படும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இதில் வெற்றி பெறும் 4 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அந்த வகையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான அணிகளும் கிட்டதட்ட முடிவாகி விட்ட நிலையில் இந்த வாரம் நடக்கும் ஆட்டங்கள் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுவரை 37 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் வழக்கத்தை விட அனைத்துப் போட்டிகளும் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் வகையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த 2 அணிகளும் ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் இப்போட்டி இந்த உலகக்கோப்பையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
ஆனாலும் 2025ம் ஆண்டு நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு புள்ளி பட்டியலில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும் என்பதால் அந்த வகையில் வங்கதேசம் - இலங்கை அணிகள் மோதும் போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த இரண்டு அணிகளும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசம்- இலங்கை அணிகள் இடையிலான போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.