
உலகக் கோப்பை தொடரின் 41வது போட்டியில் நியூசிலாந்து - இலங்கை அணிகள் பெங்களூருவில் இன்று மோதுகின்றன. அரையிறுதியில் ரேஸில் இருப்பதால் நியூசிலாந்து அணிக்கு இன்று நடைபெறும் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அரையிறுதிப் போட்டிக்கு ஏற்கெனவே இந்தியா, தென்னாப்பரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றிருக்கும் நிலையில் மீதமிருக்கும் நான்காவது இடத்துக்கான போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என புள்ளிப்பட்டியிலில் அடுத்தடுத்து இடங்களில் மூன்று அணிகள் உள்ளன. இதில் நியூசிலாந்து தவிர பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதம் உள்ளது.
இந்த சூழ்நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது. இன்றைய போட்டியில் வெற்றியுடன் ரன்ரேட்டையும் வலுவாக வைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடியில் உள்ளது அந்த அணி.
முதல் நான்கு போட்டிகளில் தொடர் வெற்றிபெற்ற நியூசிலாந்து, அடுத்த நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி அரையிறுதிக்கு தகுதி பெறுவதென்பதே கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 401 ரன்கள் அடித்தபோதிலும் மழை குறுக்கீடு காரணமாக டிஎல்எஸ் விதிமுறைப்படி நியூசிலாந்து தோல்வியை தழுவியது.
அந்த வகையில் கடந்த போட்டி நடைபெற்ற அதே பெங்களூரு மைதானத்தில் இன்றைய போட்டியும் நடைபெற இருக்கும் நிலையில், மழைக்கான வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே, நியூசிலாந்து அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதோடு இல்லாமல், இயற்கையும் அவர்களுக்கு சாதகமாக செயல்பட வேண்டும்.
நெதர்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து பெற்ற வெற்றியின் காரணமாக புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் இருந்த இலங்கை 9-வது இடத்துக்கு சென்றுள்ளது. இதனால் சாம்பின்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்க அபாயம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கும் இதுதான் கடைசிப் போட்டி என்பதால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்ள இலங்கை அணியும் போராடும் என எதிர்பார்க்கலாம்.