
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதவுள்ள நிலையில், எந்த அணி அரையிறுதிக்குள் நுழைய உள்ளது என உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர்.
உலகக் கோப்பை கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் தற்போது வரை 38 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. முதல் அணியாக இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், தென்னாப்ரிக்கா அணி அரையிறுதியில் விளையாடுவதும் உறுதியாகிவிட்டது.
மீதமுள்ள 2 இடங்களுக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் கடுமையாக மோதி வருகின்றன. இரு அணிகளும் இதுவரை தலா 7 லீக் போட்டிகளில் விளையாடி, தலா 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முறையே 3 மற்றும் 6வது இடத்தில் உள்ளன. இன்று ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால், 3வது இடத்தை உறுதி செய்யும். ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் 4வது இடத்திற்கு முன்னேறும்.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி 4ல் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் வென்று தங்களுக்கான அரையிறுதி வாய்ப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில் இரு அணிகளும் களமிறங்க உள்ளன. இதனால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.