ஆசியக் கோப்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரானார் விவிஎஸ் லக்ஷ்மண்!

ஆசியக் கோப்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரானார் விவிஎஸ் லக்ஷ்மண்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆசியக்கோப்பைக்கான இந்திய அணிக்கு விவிஎஸ் லஷ்மண் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்க்கு செவ்வாய் கிழமையன்று கரோனா தொற்று உறுதியானது. எனவே விவிஎஸ் லக்ஷ்மண் ஆசியக் கோப்பைக்கான இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடன் மோதிய இந்திய அணியின் பயிற்சியாளராகவும் லக்ஷ்மண் செயல்பட்டார்.

ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை- 2022க்கான இந்திய அணிக்கு இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக என்சிஏ கிரிக்கெட்டின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் இருப்பார் என்று பிசிசிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒருவேளை ராகுல் டிராவிட் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டால் அவர் பின்னர் அணியில் இணையவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவுடன் விவிஎஸ் லக்ஷ்மண் ஜிம்பாப்வேயில் இருந்து துபாய் சென்று இந்திய அணியின் துணை கேப்டன் கேஎல் ராகுல், தீபக் ஹூடா மற்றும் அவேஷ் கான் ஆகியோருடன் இணைந்துள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஆசியக்கோப்பையின் முதல் போட்டியில் இந்திய அணி ஆகஸ்ட் 28ம் தேதி பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது. ஆசிய கோப்பைக்கான அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா உள்ளார். முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய் உள்ளிட்ட மூன்று சிறப்பு சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் உள்ளனர். ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா என இரண்டு ஆல்ரவுண்டர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in