
உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் போது ஆடுகளத்திற்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில், போட்டியின் இடையே 'சேவ் பாலஸ்தீன்' என்ற வாசகம் அடங்கிய டீ-சர்ட் அணிந்த நபர் ஒருவர், கையில் பாலஸ்தீனக் கொடியுடன் உள்ளே நுழைந்தார். அப்போது கோலிக்கு அருகே வந்து அவரது தோளில் கைபோட்டு நின்றார். அப்போது, மைதானத்தில் இருந்த வீரர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதையடுத்து, விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை அழைத்து சென்றனர்.
மைதானத்திற்கு நுழைந்த நபர் முகத்தில் பாலஸ்தீனக் கொடியால் செய்யப்பட்ட முகக்கவசம் அணிந்திருந்ததால் அவரது அடையாளம் தெரியவில்லை. இந்நிலையில், அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் ஏற்பட்ட இந்த பாதுகாப்பு குறைபாடு, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.