செஸ் வீரர் பிரக்ஞானந்தா.
செஸ் வீரர் பிரக்ஞானந்தா.

உலகின் நம்பர் ஒன் வீரரை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.. கிராண்ட் செஸ் டூரில் அபாரம்!

போலாந்தில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ் டூர் தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா  அசத்தியுள்ளார்.

மேக்னஸ் கார்ல்சனுடன் விளையாடும் பிரக்ஞானந்தா
மேக்னஸ் கார்ல்சனுடன் விளையாடும் பிரக்ஞானந்தா

தமிழ்நாட்டில் விஸ்வநாதன் ஆனந்த்திற்குப் பிறகு  செஸ் விளையாட்டில் இந்தியாவின் முகமாக மாறி வருகிறார் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா. கடந்த ஆண்டு நடைபெற்ற செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வியை தழுவினாலும், உலக செஸ் விளையாட்டில்  பிரக்ஞானந்தா கவனிக்கப்படும் வீரராக மாறினார். 

இந்த நிலையில் போலந்து நாட்டில் 9வது கிராண்ட் செஸ் டூர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த செஸ் தொடரில் நட்சத்திர வீரர்களான பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்லன், குகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த 9வது சீசனில் போலந்து, ருமேனியா, குரோஷியா ஆகிய நாடுகளில் தலா ஒரு போட்டியும், அமெரிக்காவில் இரண்டு போட்டி என இந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 5 போட்டிகள் நடக்கும். இப்போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பையை வெல்வார்.

பிரக்ஞானந்தா
பிரக்ஞானந்தா

இந்த போட்டியில்  ஏழாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாடினார். இந்த ஆட்டம் 49வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மீண்டும் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து பிரக்ஞானந்தா களமிறங்கினார். இதில் மேக்னஸ் கார்ல்சனை எளிதாக வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தினார். இதன் மூலமாக பிரக்ஞானந்தா புள்ளிப்பட்டியலில் 14.5 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முதலிடத்தில் 20.5 புள்ளிகளுடன் சீனாவின் வெய் இ முதலிடத்திலும், மேக்ன்ஸ் கார்ல்சன் 18 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். அதேபோல் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளனர்.  இந்த நிலையில் ரசிகர்களிடையே இந்த இந்த செஸ் தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு  மிகவும் அதிகரித்துள்ளது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in