சென்னை வந்தது பாகிஸ்தான் அணி
சென்னை வந்தது பாகிஸ்தான் அணி

11 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்தது பாகிஸ்தான் அணி! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி சென்னை வந்துள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தான் அணி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் விளையாடவுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வரும் 23ம்தேதி ஆப்கானிஸ்தான் அணியை சென்னையில் பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது. இதன்பின் வரும் 27ம் தேதி தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்தும் சென்னையில் விளையாடவுள்ளது பாகிஸ்தான். இதற்காக ஒருவாரம் சென்னையில் தங்கவுள்ள பாகிஸ்தான் வீரர்கள் இன்று மாலை சென்னை விமான நிலையம் வந்தனர். விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடைசியாக 2012ல் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி சென்னையில் விளையாடியது. அதன்பிறகு 11 ஆண்டுகள் கழித்து தற்போது உலகக்கோப்பை போட்டியில் விளையாடவுள்ளது. சென்னை வந்த பாகிஸ்தான் வீரர்களை, குறிப்பாக பாபர் அஸம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் விமான நிலையத்தில் இருந்து வெளியேவரும் போது சென்னை ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி அவர்களை வரவேற்றனர்.

உலகக் கோப்பை தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி இரண்டில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது. நேற்று பெங்களூருவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி கண்டது. இதனிடையே, அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் எனில் சென்னையில் விளையாடவுள்ள இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in