பட்டையைக் கிளப்பிய ஹர்திக் பாண்ட்யா - கோலியின் அதிரடி: இந்திய அணியின் சவாலான ஸ்கோர்!

பட்டையைக் கிளப்பிய ஹர்திக் பாண்ட்யா - கோலியின் அதிரடி: இந்திய அணியின் சவாலான ஸ்கோர்!

இன்று நடைபெற்று வரும் அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 168 ரன்களை குவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில், இன்று அடிலெய்டு மைதானத்தில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இதனைத் தொடர்ந்து பேட் செய்ய தொடங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் இரண்டாவது ஓவரில் 5 ரன்னில் க்ரிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 27 ரன்னில் க்ரிஸ் ஜோர்டான் பந்தில் கேட்ச் ஆனார். மறுமுனையின் விராட் கோலி மட்டும் பொறுப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கடந்த சில ஆட்டங்களில் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவும் 14 ரன்னில் அவுட்டானதால் இந்திய அணி தத்தளிக்கத் தொடங்கியது.

இந்த சூழலில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் விராட் கோலி இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாகவும், அதே நேரத்தில் அதிரடியாகவும் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த விராட் கோலி ஜோர்டன் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 33 பந்துகளில் 5 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.

இன்றையப் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஏற்கெனவே நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி, நவம்பர் 13ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in