7வது இடத்துக்கு முன்னேறியது இங்கிலாந்து; நெதர்லாந்து படுதோல்வி!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி, நெதர்லாந்து அணியை வீழ்த்தி 7வது இடத்துக்கு முன்னேறியது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 40வது லீக் ஆட்டம் புனேவில் நேற்று பகல் இரவு ஆட்டங்களாக நடைபெற்றது. இதில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டி தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களை குவித்தது. பென் ஸ்டோக்ஸ் சதமடித்து அசத்தினார். அவர் 84 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேவிட் மலான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 87 ரன்னில் வெளியேறினார்.

கிறிஸ் வோக்ஸ் அரை சதம் கடந்தார். இதையடுத்து, 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணியினர் துல்லியமாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஸ்காட் எட்வர்ட்ஸ் 38 ரன்னும், வெஸ்லி பரேசி 37 ரன்னும், சைப்ரண்ட் 33 ரன்னும் எடுத்தனர். தேஜா 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், நெதர்லாந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், மொயின் அலி தலா 3 விக்கெட்டும், டேவிட் வில்லே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
புள்ளிப் பட்டியலில் 10வது இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியை வீழ்த்தியதால் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.