ஆப்கானிஸ்தான் அபாரம்... 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது!

மகிழ்ச்சியை  கொண்டாடும் ஆப்கானிஸ்தான் வீரர்கள்
மகிழ்ச்சியை கொண்டாடும் ஆப்கானிஸ்தான் வீரர்கள்

ஐசிசி உலக கோப்பையின் 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐசிசி 13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 13 ம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் நடப்பு சாம்பியான இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதிய  22வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று மாலை தொடங்கி நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களான அப்துல்லா ஷபீக் - இமாம் உல் அக் களம் இறங்கினர். 10 ஓவர்கள் முடிவில் 56 ரன்கள் எடுத்த நிலையில், 11வது ஓவரின் முதல் பந்தில், பாகிஸ்தான் அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. இமாம் உல் அக் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன் பின் வந்த கேப்டன் பாபர் அசாம், அப்துல்லா ஷபீக்வுடன் கைகோர்த்தார்.  ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது, ஷ்பீக்கை வீழ்த்தினார். அரைசதம் விளாசிய அவர் 58 ரன்களில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து முகமது ரிஸ்வான் 8, சவுத் ஷகீல் 25 ரன்கள் என அடுத்தடுத்து ஒருபக்கம் ஆட்டமிழந்தாலும், மறுபக்கம் பாபர் அசாம் அவரது நிதான ஆட்டத்தின் மூலம் நிலைத்து நின்று ரன்களை சேர்த்தார். 

தொடக்கம் முதலே சிறப்பாக பந்து வீசி வந்த நூர் அகமது, 74 ரன்கள் எடுத்த பாபரை வீழ்த்தினார். தொடர்ந்து ஷதாப் கான் - இப்திகார் அகமது கூட்டணி  ரன்களை சேர்க்க, 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அணி 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.  தொடக்க வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் சத்ரான் கூட்டணி நிதானமாக ஓவருக்கு 5, 6 ரன்களை அடித்து விக்கெட்களை இழக்காமல் சிறப்பாக ஆடி வந்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடக்க, ஸ்கோர் 100 ரன்களை கடந்தது.

21 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்தபோது, ஷஹீன் அப்ரிடி வீசிய ஷாட் பாலை குர்பாஸ் அடிக்க முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக எட்ஜ் ஆக, உசாமா மிர்ரின் கையில் சிக்கியது. இதனால் குர்பாஸ் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்த் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் சதம் நெருங்கிய இப்ராஹிம் சத்ரான் 87 ரன்களில் அவுட் ஆனார்.

பின்னர் ரஹ்மத் ஷா - ஹஷ்மத்துல்லா ஷாஹிதி கூட்டணி சேர, இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். சிறப்பாக விளையாடிய ரஹ்மத் ஷா அரைசதம் விளாசினார். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிறகு 286 ரன்கள் எடுத்தது. இதனால் அந்த அணி பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் அப்ரிடி மற்றும் ஹசன் அலி தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

ஏற்கனவே பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி,  தற்போது பாகிஸ்தான் அணியையும் பந்தாடியதன் மூலம் ஆறாவது இடத்திற்கு முன்னேறியதுடன், உலக கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் வெகுவாக ஈர்த்துள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in