பிரிஷா
பிரிஷா

அடேயப்பா...14 வயதில் 100 உலக சாதனை... அசத்திய நெல்லை சிறுமி!

நெல்லையைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி பிரிஷா ஒரே நாளில் 30 உலக சாதனை செய்து அசத்தியுள்ளார். இத்துடன் அவர் 100 உலக சாதனை செய்து சாதனை படைத்துள்ளார்.

சாதனை படைக்கும் பிரிஷா
சாதனை படைக்கும் பிரிஷா

நெல்லை வண்ணார் பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன்- தேவிப்பிரியா தம்பதியின் மகள் பிரிஷா(14). இவர் 9- ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி 2 வயதில் இருந்தே யோகாசனங்கள் கற்று இதுவரை 70 உலக சாதனைகளை படைத்துள்ளார்.

மேலும் 200-க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்கள், கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள், விருதுகளையும் பெற்றுள்ளார். உலகிலேயே இளம் வயதில் அதிக உலக சாதனைகள், யோகாசனங்கள், நீச்சல் மற்றும் கண்களைக் கட்டிக் கொண்டு பல திறமைகளைச் செய்து சாதனை படைத்துள்ள இவருக்கு குளோபல் யுனிவர்சிட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது.

மேலும், இளம் வயதிலேயே 3 முனைவர் பட்டங்களையும் முதன் முறையாக இவர் பெற்றார். இளம் வயது யோகா ஆசிரியர் என்ற சான்றிதழை மத்திய அரசு இவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது .

இந்த நிலையில், 70-வது உலக சாதனை செய்துள்ள பிரிஷா தனது 100-வது சாதனையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு கண்களை கட்டிக்கொண்டு 30 நிகழ்வுகளை இன்று செய்து தனது 100-வது உலக சாதனையை நிறைவு செய்துள்ளார்.

பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் நோபல் வேர்ல்டு ரெகார்ட் நிறுவனம் முன்பு மாணவ - மாணவியர் முன்னிலையில் 20 நொடிகளில் கண்களைக் கட்டிக்கொண்டு வாமதேவ ஆசனத்தில் அதிக பொருட்களை அடையாளம் காணுதல், கண்களைக் கட்டிக்கொண்டு திரையில் தெரியும் ஆசனங்களை மிக வேகமாக செய்வது, கண்களைக் கட்டிக் கொண்டு மனித உடலில் கட்டப்பட்டுள்ள பலூன்களை உடைத்தல், மேலும், கண்களைக் கட்டிக்கொண்டு 20 நொடிகளில் 5 மீட்டர் தூரத்தில் காட்டும் சைகைகளை அதிக எண்ணிக்கையில் அடையாளம் காட்டுதல், கண்களைக் கட்டிக் கொண்டு அதிக தூரம் சைக்கிள் ஓட்டுதல், கண்களைக் கட்டிக்கொண்டு ஒரு கையால் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் கையில் வளையத்தை சுத்திக்கொண்டே சைக்கிள் ஓட்டுதல் உட்பட 30 நிகழ்வுகளைச் செய்து காட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in