
உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்களை விளாசி அவுட் ஆனார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். இவருடன் ஆடிய சுப்மன் கில் 65 பந்துகளில் 79 ரன்களை குவித்த நிலையில், காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து, 398 ரன் இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி தனது இன்னிங்சை தொடங்கியது. 5 ஓவர் முடிவில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்தின் முதல் விக்கெட்டாக டெவான் கான்வே 13 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் ரச்சின் ரவீந்திரா 13 ரன் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். வில்லியம்சன், டேரில் மிட்செல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேன் வில்லியம்சன் 69 ரன்னில் ஆட்டமிழந்தார். அதே நேரத்தில் மிட்செல் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். பின்னர் வந்த டாம் லதாம் ரன் எதுவும் அடிக்காமல் ஷமி பந்துவீச்சில் அவுட் ஆனார். இதையடுத்து, அதிரடியாக விளையாடிய பிலிப்ஸ் 41 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சாம்ப்மென் 2 ரன்னில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். நங்கூரமாக நின்று விளையாடி மிட்செல் 134 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து, இந்திய அணியை நோக்கி வெற்றி திரும்பியது. இதையடுத்து நியூசிலாந்து அணி 327 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய வீரர் முகமது சமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார்.