சாயிபாபா ஒவ்வொரு சிலையிலும் இருக்கிறார்!

பாடகர் வீரமணி ராஜூ நெகிழ்ச்சி
சாயிபாபா ஒவ்வொரு சிலையிலும் இருக்கிறார்!

நடமாடும் தெய்வமாக, அற்புதங்கள் நிகழ்த்திய மகானாகப் போற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார் சாயிபாபா. வடக்கே ஷீர்டி எனும் சின்னஞ்சிறிய கிராமத்தை, மிகப்பெரிய ஊராக, உலகே அறிந்த நகரமாக மாற்றிக் காட்டிய மகான் சாயிபாபா.

தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு தன் அருளை வாரி வழங்கினார் ஷீர்டி மகான் சாயிபாபா. இதனால், ஷீர்டி எனும் பூமி, புண்ணிய பூமியாகப் பெயர் பெற்றது. உலகில் பல இடங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பாபாவை தரிசிக்க வந்தார்கள். அவரை வணங்கி தங்கள் வேண்டுதல்களை வைத்தார்கள். உலகின் மக்களுக்கெல்லாம் அருள்மழையைப் பொழிந்தார் பாபா. அதனால்தான் உலகம் முழுக்க பகவான் ஷீர்டி சாயிபாபாவுக்கு பக்தர்கள் இருக்கிறார்கள்.

தங்கள் குடும்பங்களில் பாபாவை கண்கண்ட தெய்வமாகவே ஏற்று, வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள் பக்தர்கள். வீட்டில் குழந்தைகள் பிறந்தால், அந்தக் குழந்தைகளுக்கு எந்தப் பெயர் வைத்தாலும், பெயருக்கு முன்னே ‘சாய்’ என்று சேர்த்து பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்.

பாடகர் வீரமணி ராஜூ
பாடகர் வீரமணி ராஜூ

‘நாங்கள் பாபாவின் குடும்பம்’ என்று சந்தோஷத்துடனும் பக்தியுடனும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் பக்தர்கள். வீட்டில் பாபாவின் புகைப்படத்தை பூஜையறையில் வைத்து பூக்களிட்டு வேண்டிக்கொண்டிருக்கிறார்கள். சிறிய அளவிலான சிலையை வைத்தேனும் வழிபடுபவர்களும் உண்டு. தங்களுடைய பர்ஸில், பாக்கெட் சைஸ் பாபாவை வைத்துக்கொண்டிருக்கிற பக்தர்கள் அநேகம்பேர் உள்ளனர்.

’’பாபா சூட்சுமமாக, இந்தக் கலியுகத்திலும் எல்லோருக்கும் தன் அருட்கரங்களை நீட்டி, வாஞ்சையுடன் நம்மை அரவணைத்துக் காத்தருள்கிறார். பாபாவை நம்பினோர் கைவிடப்படார் என்பதுதான் பாபா பக்தர்களின் தாரக மந்திரம்’’ என்கிறார் ஐயப்பப் பாடகரும் பாபாவின் தீவிர பக்தருமான வீரமணி ராஜூ.

இந்தியா முழுவதும் பல ஊர்களில், பாபாவுக்கு மந்திர்களும் ஆலயங்களும் எழுப்பப்பட்டிருக்கின்றன. ஷீர்டியில் பாபாவுக்கு எப்படி வழிபாடுகள் நடத்தப்படுகின்றனவோ, அதேபோல பாபாவுக்கு, பாபாவின் ஆலயங்களில் சிறப்புற வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. அங்கெல்லாம் சூட்சுமமாக இருந்து அருள்மழை பொழிந்து வருகிறார் பாபா என்று மெய்சிலிர்க்கிறார்கள் பக்தர்கள்.

அதேபோல், ’’என் முகம் கொண்ட ஓவியமோ படங்களோ சிலைகளோ எங்கே இருக்கின்றனவோ, அங்கெல்லாம் அவற்றுக்குள்ளே நான் இருந்தபடி, உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். உங்கள் கஷ்டங்களை நிவர்த்தி செய்யத் தயாராக இருக்கிறேன். ஆகவே உங்களின் குறைகளை, மனதின் துக்கங்களை என்னிடம் முறையிடுங்கள். நானிருக்கிறேன்’’ என ஸ்ரீசாயி சத்சரிதம் விளக்குகிறது.

’ஒரு புகைப்படத்தின் மூலமாகவோ சிலை வடிவமாகவோ பாபா நம்மிடம் வருகிறாரென்றால், அங்கே புகைப்படத்திலோ சிலையிலோ பாபா அமர்ந்திருக்கிறார் என்று அர்த்தம். அந்த இடத்தை, பாபா வளப்படுத்தப் போகிறார் என்று பொருள். அங்கே உள்ள இடையூறுகளையும் இன்னல்களையும், கஷ்டநஷ்டங்களையும், சிக்கல்களையும் பிரச்சினைகளையும் போக்கி அருள பாபா நம் இல்லத்தில் சூட்சும ரூபமாக வந்து அமர்ந்துவிட்டார் என்று ‘ஸ்ரீசாயி சத்சரிதம்’ விவரிக்கிறது.

’’ஆகவே, சாயிபாபாவை புகைப்படமாகவோ சிலையாகவோ தரிசிப்பது என்பது, பாபாவை நம் கண் முன்னே நேரடியாக தரிசிப்பதற்குச் சமமானது. நம் எண்ணம் சரியானபடியும் மேம்பட்டதாகவும் தர்ம கர்ம சிந்தனைகளுடனும் இருந்தால், அங்கே, புகைப்படத்தில்... சிலையில் பரிபூரணமாக இருப்பார் சாயிபாபா. நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் பக்கபலமாக இருந்து அருளுவார் பகவான் பாபா. அதனால்தான், கலியுகத்தின் நடமாடும் தெய்வம் என்றும் கண்கண்ட தெய்வம் என்றும் வாழ்வை உய்விக்க வந்த மகான் என்றும் பாபாவை வணங்குகிறோம்’’ என்கிறார் வீரமணி ராஜூ.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in