புரட்டாசி கடைசி சனிக்கிழமை; பெருமாள் தரிசனம் மறக்காதீங்க!

புரட்டாசி கடைசி சனிக்கிழமை; பெருமாள் தரிசனம் மறக்காதீங்க!

இன்று அக்டோபர் 15 புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை. மறக்காமல் பெருமாளை தரிசனம் செய்யுங்கள். துளசி தீர்த்தம் பருகி, கோவிந்தனின் திருநாமங்களைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.

புரட்டாசி மாதம் புண்ணியம் நிறைந்த மாதம். பெருமாளுக்கு உரிய மாதம். இந்த மாதத்தின் எல்லா நாட்களுமே பெருமாளை வழிபாடு செய்வதும் பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிப்பதும், புண்ணியமும் நற்பலன்களும் தந்தருளக் கூடியவை என்பது ஐதீகம்.

புரட்டாசி புதன் கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விசேஷ அலங்காரங்களும் ஆராதனைகளும் அமர்க்களப்படும். இந்த மாதத்தில் பெருமாளுக்கு கைப்பிடி துளசி கொடுத்தாலே, அதில் மகிழ்ந்து போய்விடுவாராம் பெருமாள். நாம் கேட்கும் வரங்களைத் தட்டாமல் செய்து அருளுவார் என்கிறார் பாலாஜி பட்டாச்சார்யர்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் கோயிலுக்கு தொடர்ந்து சென்று வழிபடுகிற பக்தர்களைப் போல, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் குடும்பத்துடன் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு பிரார்த்திக்கிற பக்தர்களும் இருக்கிறார்கள்.

அசைவ விரும்பிகள்கூட புரட்டாசி மாதம் வந்துவிட்டது என்று சாப்பிடாமல், பெருமாளுக்கு விரதம் மேற்கொள்வார்கள். சனிக்கிழமை அன்று அருகில் உள்ள கோயிலுக்கோ மலையில் உள்ள கோயிலுக்கோ சென்று தரிசிப்பதும் தங்களால் இயன்ற தானங்களைச் செய்வதுமாக இருப்பார்கள்.

இன்று புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை. உடல்நலம், வேலை, தேர்வு முதலான காரணங்களால் புரட்டாசி சனிக்கிழமைகளில் மகாவிஷ்ணுவை தரிசிக்க இயலாதவர்கள், இன்று மறக்காமல் பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசித்து வாருங்கள். முடிந்தால் பெருமாளுக்கு துளசி சார்த்துங்கள். தாயாருக்கு வெண்மை நிற பூக்கள் கொண்ட மாலையை, வெண் தாமரை மலர்களைச் சார்த்துங்கள்.

அதேபோல், ஆலயத்துக்குச் சென்று விட்டு, ஒரு ஐந்து பேருக்கேனும் தயிர்சாதம் அல்லது புளியோதரை சாதம் தானமாக வழங்குங்கள். நம் மனதில் உள்ள பயத்தையெல்லாம் போக்கியருளுவார் பெருமாள். திருமணம் முதலானவற்றுக்கு இதுவரை இருந்த தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவார் திருமால்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in