பாவம் தீர்ப்பார்; புண்ணியம் தருவார் திருவள்ளூர் வீரராகவ பெருமாள்!

பாவம் தீர்ப்பார்; புண்ணியம் தருவார் திருவள்ளூர் வீரராகவ பெருமாள்!

திருவள்ளூர் வீரராகவப் பெருமாளைத் தரிசனம் செய்து பிரார்த்தனை செய்துகொண்டால், நம் தீராத நோயையும் தீர்த்துவைப்பார் ஸ்ரீவீரராகவப் பெருமாள். நம் பாவங்களையெல்லாம் போக்கியருளுவார் பெருமாள். பித்ரு தோஷத்தைப் போக்குவார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது திருவள்ளூர். இங்கே, அற்புதமாக சேவை சாதிக்கிறார் ஸ்ரீவீரராகவ பெருமாள்.

சுமார் 1,500 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆலயம். அற்புதமான ஆலயம். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட திருத்தலம் என்கிறது ஸ்தல வரலாறு. 108 திவ்விய தேசங்களில் 22-வது தலம் என வீரராகவ பெருமாள் கோயிலின் பெருமைகளைச் சொல்வார்கள்.

திருமழிசை ஆழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் வந்திருந்து மங்களா சாசனம் செய்த புண்ணிய க்ஷேத்திரம். ஸ்ரீவேதாந்த தேசிகர் சம்ஸ்கிருதப் பாடல்களை மெய்யுருகப்பாடியுள்ளார்.

தை அமாவாசை நன்னாள் ஒன்றில், சாலிஹோத்ர முனிவர் இந்தத் தலத்துக்கு வந்தார். இங்கே உள்ள ‘ஹ்ருத்தாப நாசினி’ எனும் தீர்த்தத்தில் நீராடினால், நம் இதயத்தில் உள்ள துர்சிந்தனைகள், கெட்ட விஷயங்கள், நம் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்று அவரின் உள்ளுணர்வு சொல்லியது. குளக்கரையில் அமர்ந்த சாலிஹோத்ர முனிவர், அங்கே முப்பத்து முக்கோடி தேவர்களும் ரிஷிகளும் நீராடுவது கண்டு வியந்து போனார். குளத்தின் சிறப்பு குறித்து அவர்களிடம் விவரம் கேட்டார்.

அப்போது, பிருத்யும்னன் எனும் ராஜா இங்கே வந்து தவமிருந்து, இந்தக் குளத்தில் நீராடியதாகவும், அவனுக்குப் பெருமாளே நேரில் தரிசனம் தந்து வரம் அருளினார் என்றும், கங்கைக்கு நிகரான இந்தத் குளத்தில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கும் என்றும் தேவர்கள் தெரிவித்தார்கள்.

தான் நினைத்தது சரிதான் என உணர்ந்து சிலிர்த்தார் முனிவர். அங்கே குளத்தில் நீராடி, கடும் தவத்தில் மூழ்கினார். அதில் மகிழ்ந்த பெருமாள், அவரின் வேண்டுகோளை ஏற்று, அங்கேயே தங்கி, கோயில் கொண்டு, இன்றளவும் அருள்பாலித்து வருகிறார் என்று சொல்லிச் சிலாகிக்கிறது ஸ்தல புராணம்!

எனவே, இங்கு நீராடி பெருமாளைத் தரிசித்தால், புண்ணியங்கள் பெருகும்! முக்கியமாக, தை அமாவாசை நாள் முதலான விசேஷமான நாட்களில், நீராடி, பெருமாளை தரிசித்தால், சகல பாவங்களும் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்!

தன் வலது கரத்தால் முனிவர் சிரசில் சத்தியம் செய்யும் சிற்பமாகவும், நாபிக்கமலத்தில் இருக்கிற ஸ்ரீபிரம்மாவுக்கு வேதோபதேசம் செய்தபடி சயனத் திருக்கோலத்திலும் அற்புதமாகக் காட்சி தருகிறார் வீரராகவ பெருமாள். அரக்கர்களை வதம் செய்ததால் ஸ்ரீவீரராகவ பெருமாள் என்றும் ராமலிங்க அடிகளாரின் வயிற்று வலியைப் போக்கியதால், ஸ்ரீவைத்திய வீரராகவர் என்றும் திருநாமங்கள் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

இங்கு அருளும் ஸ்ரீநவநீத கிருஷ்ணர் வரப்பிரசாதி. இங்கு வரும் பக்தர்களுக்குத் தேன் கலந்த தினைமாவுப் பிரசாதம் வழங்கப்படுகிறது. இதை உட்கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை.

இங்கு, மூன்று அமாவாசை தினத்தில், வெல்லம் மற்றும் பால் கொண்டு தீர்த்தக் குளத்தில் கரைத்துப் பிரார்த்திப்பது விசேஷம். அதேபோல், உப்பு மற்றும் மிளகு சமர்ப்பிக்கும் வழிபாடும் உண்டு. அப்படிப் பிரார்த்தனை செய்தால், நம் துயரங்களும் துக்கங்களும் விலகும் என்கின்றனர். உறுப்புப் பொம்மையை காணிக்கையாகச் செலுத்துகிற வழக்கமும் உண்டு.

தாயாரின் திருநாமம்- ஸ்ரீகனகவல்லித் தாயார். தை மாத பிரம்மோற்சவம் இங்கு பிரசித்தம். அந்த நாளில், கனகவல்லித் தாயாரின் தந்தையிடம் சென்று, வேஷ்டி- புடவை வாங்கி வரும் வைபவம் சிறப்புற நடைபெறும். எனவே, ஸ்ரீகல்யாண வீரராகவர் என்றும் பெருமாளுக்கு திருநாமம் உண்டு. ஆகவே, இந்தத் தலத்துக்கு வந்து, பெருமாளை மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டால், கல்யாண யோகம் கைகூடி வரும் என்பது ஐதீகம்!

மார்கழியில் தினமும் பெருமாளின் திவ்விய தரிசனம், வைகுண்ட ஏகாதசி, சொர்க்க வாசல் திறப்பு என விழாக்கள் நிறைந்த வீரராகவ பெருமாள் கோயிலுக்கு வந்து தரிசியுங்கள். குடும்பம் செழிக்க, சந்ததி சிறக்க இனிதே வாழலாம்!

ஐப்பசி மாதம் மற்றும் கார்த்திகை மாதங்களில், குடும்ப சகிதமாக வீரராகவ பெருமாளை தரிசித்தால், நம் சந்ததியைச் செழிக்கச் செய்வார்; இல்லத்தில் நிம்மதியையும் ஆனந்தத்தையும் தந்தருளுவார் வீரராகவ பெருமாள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in