திருப்பாவை பாடினால் திருமண வரம் நிச்சயம்!

- ஆண்டாள் பாடலின் மகிமை; மார்கழி மாதத்தின் பெருமை!
திருப்பாவை பாடினால் திருமண வரம் நிச்சயம்!

உண்மையான பக்திக்கு உதாரணம் ஸ்ரீஆண்டாள். அந்தப் பக்திக்கு எப்போதுமே பலன் நிச்சயம் உண்டு என உலகுக்கு உணர்த்தியவர் ஸ்ரீமந் நாராயணன்.

‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என அருளினார் மகாவிஷ்ணு. அந்த மார்கழி முழுவதும் நம் பக்திக்காகவும் நம் இல்லற மேன்மைக்காகவும் திருமாலை வழிபடுவதற்கு நமக்கு வழி காட்டியிருக்கிறாள் ஸ்ரீஆண்டாள் பெருந்தேவி.

அவள் தன் மணாளனாக மகாவிஷ்ணுவையே நினைத்து வாழ்ந்தாள். இந்த பூமியில் நம்மைப் போல் சராசரி மனுஷியாக வந்து ஒரு அவதாரத்தை நிகழ்த்தினாள். அனவரதமும் அதாவது சதாசர்வகாலமும் அரங்கனையே தனக்குள் நினைத்துக் கொண்டிருந்தாள். பெருமாளுக்குத் தொடுத்த மாலையை தான் சூடி அழகுபார்த்து, பிறகு பெருமாளுக்குச் சூட்டுவதற்கு அளித்தாள். ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ எனும் பெருமையும் பெற்றாள்.

ஆண்டாள், தன் மனதில் இருப்பதையெல்லாம் உருகி உருகிப் பாடலாகவே பாடிப் பூஜித்தாள். அதைத்தான் திருப்பாவை என்று போற்றுகிறோம். மார்கழி மாதமாகவே திகழ்கிற மகாவிஷ்ணுவை, இந்த மார்கழி மாதத்தில் ஸ்ரீஆண்டாள் பாடிய திருப்பாவையை பாராயணம் செய்து, அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தால், திருமணத் தடைகள் அனைத்தும் நீங்கப் பெறலாம். பெண்கள், நல்ல குணம் கொண்ட கணவனை அடைவார்கள். மாங்கல்ய தோஷம் நீங்கி, கருத்தொருமித்து வாழ்வார்கள் என்கிறார் மதுரை அழகர் கோயிலின் அம்பி பட்டாச்சார்யர்.

திருப்பாவையில் மொத்தம் முப்பது பாடல்கள். முதலில் சில பாடல்களைப் பார்ப்போம்.

திருப்பாவை பாடல்களும் விளக்கங்களும்...

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!

அதாவது, அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலவு வீசும் மிக அற்புதமான நாள் இது. இன்று நாம் நீராடச் செல்வோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறம் கொண்டவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான திருமுகம் மிக்கவனும் நாராயணனின் மற்றுமொரு அம்சமுமான ஸ்ரீகண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் பரவசம் கொள்வோம். இந்த அகிலமே நம்மை ஆசி வழங்கி வாழ்த்தும்.

’’இந்தப் பாசுரத்தை ஸ்ரீஆண்டாள், வைகுண்டத்தை மனதில் வைத்துக் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் ’நாராயணனே பறை தருவான்’ என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் தரிசிக்கலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணனின் இருப்பிடம். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை, அதாவது வைகுண்டத்தை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடலாம். இந்த பூமியில் இருக்கும் வரை, நல்ல கணவன் அல்லது நல்ல மனைவி வாய்க்கப்பெற்று, செல்வங்கள் சூழ, நிம்மதியும் ஆனந்தமுமாக வாழலாம்’’ என்கிறார் அம்பி பட்டாச்சார்யர்.

அடுத்த பாடல்...

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத்துயின்ற பரமன் அடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!

அதாவது, ‘அன்புத்தோழியரே! அந்த பரந்தாமனையே நம் துணைவனாக அடைய வழி செய்யும் பாவை நோன்பு விரத முறையை இதோ... கேளுங்கள். உணவில் நெய் சேர்க்கக் கூடாது. பால் அருந்தவும் கூடாது. சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து நீராட வேண்டும். கண்ணில் மை இட்டுக்கொள்ளக்கூடாது. கூந்தலில் மலர் சூடிக்கொள்ளவேண்டாம். தீய செயல்களை மனதால் நினைப்பதைத் தவிர்ப்போம். தீய சொற்களைப் பேசுவதை விலக்கிவிடுவோம். பிறரைப் பற்றி கோள் சொல்லாமல் இருப்போம். ஏழைகளுக்கும், பக்தர்களுக்கும் போதுமான அளவு தர்மம் செய்வோம்’ என அருளுகிறாள் ஸ்ரீஆண்டாள்.

விரதம் இருப்பது என்றால் சும்மாவா? மனதைக் கட்டுப்படுத்த விரதம் என்பது ஒரு வழி. நாவை கட்டுப்படுத்த உண்ணாநோன்பு எனும் விரதம் இன்னொரு வழி. உணவுக் கட்டுப்பாடு மட்டுமல்ல... மனதையும் கட்டிப் போடச் சொல்கிறாள் ஆண்டாள். மனதை நல்ல நினைவுகளாலும், வாயை நல்ல சொற்களாலும் நிறைக்க வேண்டும் என்கிறாள். இப்படி இருந்தாலே பரமனின் கைக்கெட்டும் தூரத்துக்கு நாம் சென்றுவிடுவோம் என்று சொல்லவில்லை ஆண்டாள். அந்தப் பரந்தாமனே நம் கைக்கு எட்டும் தூரத்துக்கு வந்து, நமக்கு வேண்டியதையெல்லாம் அருளுவான் என உறுதிபடத் தெரிவிக்கிறாள்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!

அதாவது, ’தோழியரே! மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, வாமன அவதாரம் எடுத்த பரந்தாமன், இந்த பிரபஞ்சத்தையே அளந்து தன்னுடையதாக்கிக் கொண்டான். அவனுடைய பெருமை குறித்துப் பாடவும், பாவைக்கு மலர் சார்த்தி வழிபடவும் நீராடக் கிளம்புவோம் வாருங்கள்.

இந்த வழிபாட்டால் தேசமெங்கும், மாதம் மும்மாரி பெய்யும் என்பது உறுதி. வயல்களில் நெல் செழித்து வளரும். வயலுக்குள் மீன்கள் பாய்ந்தோடி மகிழும். குவளைப் பூக்களில் புள்ளி வண்டுகள் தேன் குடித்து மயங்கிக் கிடக்கும். பசுக்கள், வாரி வழங்கும் வள்ளலைப் போல, தாராளமாக பால் தரும். அள்ள அள்ளக் குறையாமல் செல்வம் பெருகும் என்பதை அழகுறச் சொல்லுகிறாள் ஆண்டாள்.

ஓங்கி உலகளந்த திரிவிக்ரமனாகிய கோவிந்தனை வணங்கினால், நமக்கு என்னென்ன கிடைக்கும் என்பதை ஆண்டாள் பட்டியலிட்டு கவிதையாகச் சொல்கிறாள். அதேசமயத்தில், இங்கே தனது தேசப்பற்றையும் விளக்குகிறாள். தங்கள் ஊர் மட்டுமின்றி தேசமே செழிக்க மார்கழி நோன்பு வழிவகைகள் என்று நமக்கு வழிகாட்டுகிறாள். நாமும், உலக நன்மைக்காகவும் நம்முடைய குடும்ப மேன்மைக்காகவும் பரமனின் புகழ் பாடுவோம். திருப்பாவை பாடி அரங்கனைக் குளிர்விப்போம்!

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!

அதாவது, ‘மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதை கவனமாகக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கறுத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசு. வலம்புரிச் சங்கு ஒலிப்பதுபோல் இடியை ஒலியாக எழுப்பு.வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சாரங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழையைப் பொழிவாயாக! அந்த மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்ச்சியுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக!’ என்கிறாள் ஆண்டாள் பிராட்டியார்.

ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. அவர்களுக்கு பசுக்களே உலகம். எனவே பொதுவாக, "ஆழிமழைக் கண்ணா" என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்கப் பயன்படுத்தும் "கண்ணா" என்ற வார்த்தையைப் போலத்தான்! எனவே "பர்ஜந்யா" என்பதற்குப் பதிலாக "கண்ணா " என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in