அம்மனுக்கு ‘பொட்டு’ கொடுத்தால் விரைவில் திருமணம்!

- புதுக்கோட்டை அரியநாச்சி மகிமை
அம்மனுக்கு ‘பொட்டு’  கொடுத்தால் விரைவில் திருமணம்!

மார்கழி மாதத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் நேர்த்திக்கடன் செலுத்தவும் தங்கள் பிரார்த்தனைகளை அரியநாச்சி அம்மனிடம் சொல்லி முறையிடவும் எண்ணற்ற பெண்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

புதுக்கோட்டை மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள பல ஊர்களில், புதுக்கோட்டை தேவஸ்தான கோயிலுக்கு உட்பட்ட கோயில்கள் பல அமைந்துள்ளன. அவற்றில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் கீழராஜ வீதியில் அமைந்துள்ள ஸ்ரீஅரியநாச்சி அம்மன் கோயிலும் ஒன்று!

புராணப் பெருமை கொண்ட, புராதனமான திருக்கோயில் இது. குலோத்துங்க சோழன், புதுக்கோட்டை நகரில் ஸ்ரீசாந்தநாத ஸ்வாமி ஆலயம் கட்டினான். சிவனாருக்குக் கோயில் எழுப்பும் அதே வேளையில், அருகிலேயே ஸ்ரீஅம்பிகைக்கும் தனியே ஓர் ஆலயம் அமைக்கவேண்டும் என ஆவல் கொண்டான்.

அதன்படி சிவாலயத்துக்கு அருகிலேயே அம்பிகைக்கும் ஆலயம் ஒன்றை அமைத்தான். அந்த அம்பிகையின் திருநாமம் ஸ்ரீஅரியநாச்சி அம்மன்.

சோழர்கள் காலத்திய ஆலயம் என்றாலும் பாண்டியர்களும் இங்கே இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர் என்று சரித்திரச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. மேலும், பாண்டிய மன்னர்களின் மீன் சின்னம் இந்த ஆலயத்தில் பொறிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கமுடிகிறது. அதேபோல், அம்மனின் அருளைக் கண்டு வியந்த பல்லவ மன்னர்கள் இந்தப் பகுதியை ஆட்சி செய்தபோது, பல்லவர்களும் இந்தக் கோயில் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்கிறது ஸ்தல வரலாறு.

அரியநாச்சி அம்மன், உண்மையிலேயே அரிதான அம்மனாக, அழகும் கருணையும் கொண்டவளாகக் காட்சி தருகிறாள். தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருளையும் பொருளையும் வாரி வழங்குகிறாள் ஸ்ரீஅரியநாச்சி அம்மன். செவ்வாய்க் கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து அம்மனைத் தரிசித்துப் பிரார்த்தித்துச் செல்கின்றனர் பக்தர்கள். குறிப்பாக, ராகு கால வேளையில் ஸ்ரீஅரியநாச்சி அம்மனுக்கு அரளிமாலை சார்த்தி, நெய் தீபமேற்றி வழிபட்டால்... திருமணத் தடைகள் நீங்கும்;. கல்யாண மாலை கிடைக்கப் பெறலாம்; குழந்தை வரம் கிடைத்து இல்லத்தில் சந்தோஷமும் ஆனந்தமும் நிறைந்திருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

திருமணத் தடை நீங்க, தங்கம் அல்லது வெள்ளியில் பொட்டு வாங்கி, அம்மனை வேண்டிப் பிரார்த்தித்து, கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். ஆலமரம் மற்றும் வேம்பு மரம் ஆகியவை சேர்ந்திருக்கும் மரங்களைச் சுற்றிப் பிராகாரம் வந்து, மஞ்சள் சரடை மரத்தில் கட்டிவிட்டு பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் திருமணத் தடை அகலும் என்கிறார் கணேச குருக்கள்!

பௌர்ணமிதோறும் லட்சார்ச்சனையும் திருவிளக்கு பூஜையும் இங்கு நடைபெறுவது சிறப்பு. இங்கே உள்ள நாகர் விக்கிரகத்துக்குப் பாலபிஷேகம் செய்து அம்மனை வேண்டிக்கொண்டால், தோஷங்கள் விலகும்!

பிள்ளை பாக்கியம் இல்லை என ஏங்குவோர், அம்மனுக்குப் பாலபிஷேகம் செய்து தொட்டிலும் வளையலும் கட்டி வேண்டிக்கொண்டால் விரைவில் குழந்தை வரம் கிடைக்கப் பெறுவார்கள்.

தை மாதமும் ஆடி மாதமும் வந்துவிட்டால், செவ்வாய், வெள்ளி என்றில்லாமல் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். இந்த மாதத்தில், பிரார்த்தனை நிறைவேறியவர்களும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

மார்கழி மாதத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் நேர்த்திக்கடன் செலுத்தவும் தங்கள் பிரார்த்தனைகளை அரியநாச்சி அம்மனிடம் சொல்லி முறையிடவும் எண்ணற்ற பெண்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in